Saturday 29 October 2016

சோழ மன்னர்கள் Later Chola Kings XXV விக்ரம சோழன் (மூன்றாம் பகுதி) Vikrama Chozhan (Part-III)


( சோழ மன்னர்கள் -44.)

    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி!


விக்ரம சோழன். (கி.பி.1118- 1135)
~~~~~~~ **** ~~~~~~~

(
மூன்றாம் பகுதி)

தலைநகரம்
, அரண்மனை, கொட்டகாரங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
        விக்ரம சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கியது இம்மன்னனின் தந்தைக்கு தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரமே ஆகும். அதேவேளையில் இம்மன்னனது காலத்தில் இரண்டாவது தலைநகராக, தற்போது முடிகொண்ட சோழபுரம் என்று அறியப்படும்பழையாறை நகரம் இருந்து வந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றது.

        
விக்ரம சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் அரண்மனை தில்லைமாநகரிலும் (சிதம்பரத்திலும்), காட்டுமன்னார்கோயிலிலும் இருந்தன என அறியமுடிகின்றது.

        
இவை தவிர்த்து தனது பேரரசைப் பார்வையிட மன்னன் வருகின்ற காலத்தில் தங்குவதற்காக, அரண்மனை இல்லாத பகுதிகளில் பெரும் மண்டபங்கள் அமைக்கப் பெற்றிருந்தன. அக்காலத்தில் அம் மண்டபங்கள் யாவும் கொட்டகாரங்கள் என்று அழைக்கப்பட்டன.
       

தில்லை
(சிதம்பரம்) பெரிய கோயிலுக்கு விக்ரம சோழனின் திருப்பணிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
           விக்ரம சோழன் தனது ஆட்சிக்காலத்தில், தனது ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்கள் அளித்த திறையினைக் கொண்டு, தில்லை(சிதம்பரம்) பெரிய கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தான் என்பதை அவனது மெய்கீர்த்திகள் தெளிவாக்குகின்றன. மேலும் அத்திருப்பணிகள் யாவும் இம்மன்னனது ஆட்சிக்காலத்தின் பத்தாம் ஆண்டின் சித்திரை மாதத்தில் முடிவுபெற்ற செய்தியையும் அவை தெரிவிக்கின்றன. தில்லை சிற்றம்பல திருச்சுற்று மாளிகைக்கு, (அதாவது, தற்போது உற்சவ மூர்த்தி நடராஜர் சிலை அமைந்துள்ள மண்டபத்திற்கு) பொன்னாலான கூரை வேய்ந்தது, மேலும், அங்குள்ள கோபுர வாயிலுக்கும், பலி பீடத்திற்கும், கூடசாலைக்கும்  பொன் வேய்ந்ததையும் அறியமுடிகின்றது.

         மேலும்
, விக்ரம சோழன் தான் பிறந்த உத்திரட்டாதி நாளில் நடைபெரும் விழாவில் வலம் வரும் திருத்தேருக்குப் பொன்வேய்ந்து அதற்கு முத்துக்களால் ஆன வடங்கள் (தேரை இழுத்துச்செல்ல அமைக்கப்படும் கயறு) அளித்தான் என்பதையும் அறியமுடிகின்றது. இவையன்றி, அக்கோயிலின் இறைவனுக்கு அமுது படைக்க பொன்னாலான கலன்களையும்(பாத்திரங்களையும்) அளித்தான் என்பதையும் அறியமுடிகின்றது.

        தில்லை
(சிதம்பரம்) பெரிய கோயிலில் பொன்னால் செய்யப்பட்ட கற்பகத்தரு (தற்போது  உற்சவ மூர்த்தி நடராஜர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகே, சிதம்பர ரகசியமாகக் காட்டப்படும் சிறு அறையில் காணப்படும் வில்வ மரம்) ஒன்றையும் அமைத்தான் என்கின்ற செய்தியையும் அவனது மெய்கீர்த்தி மூலம் அறியமுடிகின்றது.

       
தில்லை சிற்றம்பலத்தையொட்டி அமைந்துள்ள முதலாம் திருச்சுற்றை(பிராகாரத்தை)ச் சூழ்ந்துள்ள திருமாளிகைவிக்கிரம சோழன் திருமாளிகை என்று கல்வெட்டுக்கலால் அறியப்படுவதால் அத்திருப்பணி விக்கிரம சோழனால் நிறைவேற்றப்பட்டிருத்தல் வேண்டும்.

    தில்லை
(சிதம்பரம்) பெரிய கோயிலில் நூற்றுக்கால் மண்டபத்தினை மன்னன் விக்ரம சோழன் அமைத்தான் என்பதையும் கல்வெட்டுக்கள் தெளிவுபடுத்துகின்றன.

   இம்மன்னனின் கட்டளையின்படி இவனது படைத்தலைவன் அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவன் பொன்னம்பலவாணர் எனப் போற்றப்படும் தில்லை இறைவன் மாசிமாதம் மக நாளில் எழுந்தருளி கடலாடி வீற்றிருக்க பெரிய மண்டபமும் பெரு வழியையும் அமைத்தான் என்பதும் அம்மண்டபம் தில்லை
(சிதம்பரம்) அருகே உள்ள கிள்ளை எனும் ஊரில் இருப்பதும் அறியமுடிகின்றது.

      முதலாம் பராந்தகனது காலந்தொட்டே சோழமன்னர்கள் தில்லை நகர் கோயிலிலும் திருவரங்க கோயிலிலும் திருப்பணிகள் செய்து வந்ததை விக்ரம
சோழனும் மேற்கொண்டான் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

விக்ரம சோழனது பிற சிறப்பு பெயர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     இம்மன்னனது ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல் வெட்டுக்கள் மூலமாகவும், இம்மன்னனைக் குறித்து இயற்றப்பட்ட விக்ரம சோழனுலாவின் மூலமாகவும் அறியக்கூடிய சிறப்பு பெயர்கள் இரண்டாகும். அவை தியாகசமுத்திரம் என்பதுவும் அகளங்கன்என்பதுவும் ஆகும்

தியாகசமுத்திரம்
~~~~~~~~~~~~~~~~~~~
     விக்ரம சோழன் தனது ஆட்சிக்காலத்தின்  ஏழாம் ஆண்டில் திருஇடைமருதூர்(திருவிடைமருதூர்) எனும் ஊருக்குச் சென்றிருந்த வேளையில் அந்நகரைச் சார்ந்த வண்ணக்குடி எனும் ஊரினைத் தியாகசமுத்திர சதுர்வேதி மங்களம் எனம் புதிய பெயரினை சூட்டி திருஇடைமருதூர் கோயிலுக்கு இறையிலி நிலமாக தேவதானமாக அளித்தான் என்று அவ்வூர் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அதுமுதல் அவனுக்கு அச்சிறப்பு பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

அகளங்கன்
~~~~~~~~~~~~~
       இம்மன்னனை, கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தனது விக்ரம சோழனுலாவில் ஏழு இடங்களில் அகளங்கன்எனக் குறிப்பிடுகின்றார். மேலும் அக்காலத்தில் அகளங்காபுரம்என்ற பெயரில் சில ஊர்கள் இருந்து வந்தமையாலும் இம்மன்னனுக்கு அகளங்கன்என்ற சிறப்பு பெயர் வழங்கப் பெற்றுவந்ததை அறியமுடிகின்றது.

விக்ரம சோழனின் அவைப் புலவர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      விக்ரம சோழனின் அவைக்களப் புலவராக கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டக்கூத்தர் விக்ரம சோழன் மீது நூல் ஒன்றை இயற்றி அதற்கு      விக்ரம சோழனுலா என்ற பெயரையும் இட்டார். இதுவன்றி, இக் கவிச்சக்கரவர்த்தி, இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது குலோத்துங்க சோழனுலாவையும் இரண்டாம் இராசராச சோழன் மீது இராசராச சோழனுலாவையும் பாடியுள்ளார் என்பதும் சிறப்பாகும். இவர் இயற்றிய இம்மூன்று நூல்கள்தான் மூவர் உலா என்று அறியப்படுகின்றது.

பேரரசை வாட்டியப் பெரும் பஞ்சம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
            “இவ்வூர் யாண்டாவது ஆறாவது பெருவெள்ளம் கொண்டு ஊரும் போகமும் அழிந்து அநர்த்தப்பட்டுஎன்று வட ஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள திருவொத்தூரில் கிடைத்த கல்வெட்டில் காணப்படும்  செய்தியின் மூலமும்

            “
மகாசபையோம் இவ்வூர்த் திருமேற் கோயிலான நியாய பரிபாலன விண்ணகராழ்வார் கோயிலிலே கூட்டம் குறைவறக் கூடியிருந்து நம்மூர் யாண்டு 6வது கடமைத் தட்டுண்டாய் இத்தட்டுக்குச் சமுதாயமான நிலத்திலே சிறிது நிலம் விற்றாயினும் கடமைத்தட்டுபோக்கறுக்க வேணுமென்று மகாசபையோம் சம்மதித்துஎன்று தென் ஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள திருவதிகை எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் காணப்படும்  செய்தியின்  மூலமும்  விக்ரம சோழனது ஆட்சிக்காலத்தின் ஆறாம் ஆண்டில்  சோழராச்சியத்தின் தொண்டை மண்டலத்திலும், நடுநாட்டிலும்  பெரியவெள்ளம் ஏற்பட்டு அதனால் அப்பகுதிகளில் கொடிய பஞ்சம் உண்டாகியிருந்தது என்பதை அறியமுடிகின்றது.

    
மேலும், விக்ரம சோழனது ஆட்சிக்காலத்தின் பதினோராம் ஆண்டில்  சோழராச்சியத்தில் பஞ்சம் ஏற்பட்டதை தஞ்சை, கோவிலடியில் கிடைக்கப்பெற்றக் கல்வெட்டில் காணப்படும் இவ்வூர் வடபிடாகை திருச்சடை முடியுடைய மகாதேவர் கோயிலில் திருமண்டபத்தில் கூட்டம் குறைவறக்கூடியிருந்த்து பண்ணின பரிச்சாவது காலம் பொல்லாதாய் நம்மூர் அழிந்து குடியோடிப்போய் கிடந்தமைஎன்கின்ற செய்தியின்  மூலமும் அறியமுடிகின்றது.

      இவ்வாறாக பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மன்னனும் பெருந்தனக்காரர்களும் பெருமளவு பொருள்களை அளித்து மக்களின் துயரைப்போக்கியதையும் அறியமுடிகின்றது
.




                                                                          (தொடரும்)

Wednesday 22 October 2014

சோழ மன்னர்கள் Later Chola Kings XXIV விக்ரம சோழன் (இரண்டாம் பகுதி) Vikrama Chozhan (Part-II)



( சோழ மன்னர்கள் -43.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி!


விக்ரம சோழன். (கி.பி.1118- 1135)
~~~~~~~ **** ~~~~~~~

(இரண்டாம் பகுதி)


      
வேங்கி நாடு மீண்டும் சோழப் பேரரசோடு இணைந்தது குறித்து நாம் அறிவது எங்ஙனம் எனில், கி.பி.1127 ல் மகாமண்டலேசுவரன் நம்பயன் என்பவன் விக்ரம சோழனுக்கு திறை செலுத்தும் குறுநில மன்னனாய் வேங்கி நாட்டிலிருந்து அரசாண்டான் என்ற செய்தியை குண்டூர் மாவட்ட கல்வெட்டினால் அறியமுடிவதாலும், கி.பி.1135 ல் வெலநாண்டுத் தலைவர்கள் சோழமன்னன் விக்ரம சோழனுக்கு திறை செலுத்தும் குறுநில மன்னராய் இருந்தனர் என்பதை கிருஷ்ணா மாவட்ட கல்வெட்டு உணர்த்துவதிலிருந்தும், வேங்கி நாட்டில் இம்மன்னனது காலத்திய  கல்வெட்டுக்கள் அதிகம் கிடைக்கப் பெற்ற காரணத்தாலும், கி.பி.1126 ல் மேளைச் சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தன் மாண்ட பின்னர்வேங்கி நாட்டை மீண்டும் சோழப்பேரரசின் ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தை செயலாக்கி அதில் வெற்றியும் பெற்று வேங்கியை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்தான் விக்ரம சோழன் என்பது புலப்படும்.


கங்கபாடி நாடு சோழநாட்டிற்கு மீண்டது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       கர்நாடக மாநிலம், கோலார், சுகட்டூர் எனும் இடத்தின் கல்வெட்டொன்று விக்ரம சோழனது அதிகாரியான உதயமார்த்தாண்ட பிரம மாராயன் என்பவன் சிவனுக்கு கோயில் ஒன்றினை எழுப்பி அக்கோயிலுக்கு நிவந்தமாக நிலம் அளித்தான் என்கிற செய்தியைத் தருவதாலும், அதுபோலவே, தற்போது தங்கச் சுரங்கம் உள்ள கோலார் பகுதியின் ஶ்ரீனிவாசப்பூர் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு விக்ரம சோழன் அப்பகுதி சிவன் கோயிலுக்கு தனது ஆட்சிக்காலத்தின் பத்தாம் ஆண்டில் விமானம் அமைத்த செய்தியைக் குறிப்பிடுவதாலும், மேலும், விக்ரம சோழனின் கல்வெட்டுகள் வேங்கி நாட்டின் பல்வேறு இடங்களில் காணப்பட்டது போலவே கங்கபாடி நாட்டிலும் காணப்பெற்றதாலும் கங்கபாடி நாடானது விக்ரம சோழனது காலத்தில் சோழ இராச்சியத்தின் கீழ் மீண்டும் வந்ததை அறியமுடிகின்றது.

கலிங்கம் கொண்ட சோழன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
            இம்மன்னன் தனது இளமைப் பருவத்திலேயே, தந்தை முதலாம் குலோத்துங்க சோழனது காலத்தில், வேங்கி நாட்டின் அரசப் பிரதிநிதியாக இருந்தவேளையில், தென்கலிங்க மன்னன் தெலுங்க வீமனை வென்று வாகை சூடியதை கவிச்சக்கரவத்தி ஒட்டக்கூத்தர் தனது கலிங்கத்துப் பரணியில்


செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்
தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு
வருத்தந் தவிர்த்துலக காண்டபிரான்
மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே

எனப் புகழ்வதாலும்,

“ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே”

என விக்ரம சோழனுலாவில் குறிப்பிடுவதாலும்,
“தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப்
                   பரணி புனைந்த பரிதி - முரணிப்
                   புரந்தர னேமி பொருவ வகில
                   துரந்தரன் விக்கிரம சோழன்”

என இராசராச சோழனுலாவில் குறிப்பிடுவதாலும் விக்ரம சோழன் கலிங்க நாட்டை சோழப்பேரரசிற்கு அடிபணிய வைத்தமையை நன்கு அறியமுடிகின்றது.

விக்ரம சோழன் ஆட்சியின் சிறப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      இம்மன்னனது ஆட்சிக் காலத்தின்போது சோழ சாம்ராச்சியத்தில் பெரும் போர்கள் ஏதும் இல்லாத காரணத்தால் தனது சாம்ராச்சியத்திற்கு உட்பட்ட நாடுகளையெல்லாம் இம்மன்னன் நேரில் பார்த்து தனது நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து வந்தான் என்பதை இம்மன்னன் பல்வேறு ஊர்களிலிருந்து அனுப்பிய உத்திரவுகளிலிருந்து
அறிந்துகொள்ளலாம்.

   
மேலும், “மன்னுயிர்க்கெல்லாம் இன்னுயிர் தாய்போல் தண்ணனி பரப்பித் தனித் தனி பார்த்து மண்முழுதுங் களிப்ப” என்றும், மக்களிடையே குறையில்லாத வாழ்க்கை நிலவியதால் இம்மன்னனது அரண்மனை வாயிலில் கட்டியிருந்த மணி ஒலிக்காது நாவொடுங்கி இருப்பதாக –“தன் கோயிற் கொற்றவாயிற் புறத்து மணிநா வொடுங்க” என இவனது மெய்கீர்த்தி கூறுவதிலிருந்தும் விக்ரம சோழன் ஆட்சியில் சோழ சாம்ராச்சியத்தின் மக்கள் யாவரும் இன்னல்கள் ஏதுமின்றி இன்புற்று வாழ்ந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

(தொடரும்)