Wednesday 22 October 2014

சோழ மன்னர்கள் Later Chola Kings XXIV விக்ரம சோழன் (இரண்டாம் பகுதி) Vikrama Chozhan (Part-II)



( சோழ மன்னர்கள் -43.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி!


விக்ரம சோழன். (கி.பி.1118- 1135)
~~~~~~~ **** ~~~~~~~

(இரண்டாம் பகுதி)


      
வேங்கி நாடு மீண்டும் சோழப் பேரரசோடு இணைந்தது குறித்து நாம் அறிவது எங்ஙனம் எனில், கி.பி.1127 ல் மகாமண்டலேசுவரன் நம்பயன் என்பவன் விக்ரம சோழனுக்கு திறை செலுத்தும் குறுநில மன்னனாய் வேங்கி நாட்டிலிருந்து அரசாண்டான் என்ற செய்தியை குண்டூர் மாவட்ட கல்வெட்டினால் அறியமுடிவதாலும், கி.பி.1135 ல் வெலநாண்டுத் தலைவர்கள் சோழமன்னன் விக்ரம சோழனுக்கு திறை செலுத்தும் குறுநில மன்னராய் இருந்தனர் என்பதை கிருஷ்ணா மாவட்ட கல்வெட்டு உணர்த்துவதிலிருந்தும், வேங்கி நாட்டில் இம்மன்னனது காலத்திய  கல்வெட்டுக்கள் அதிகம் கிடைக்கப் பெற்ற காரணத்தாலும், கி.பி.1126 ல் மேளைச் சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தன் மாண்ட பின்னர்வேங்கி நாட்டை மீண்டும் சோழப்பேரரசின் ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தை செயலாக்கி அதில் வெற்றியும் பெற்று வேங்கியை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்தான் விக்ரம சோழன் என்பது புலப்படும்.


கங்கபாடி நாடு சோழநாட்டிற்கு மீண்டது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       கர்நாடக மாநிலம், கோலார், சுகட்டூர் எனும் இடத்தின் கல்வெட்டொன்று விக்ரம சோழனது அதிகாரியான உதயமார்த்தாண்ட பிரம மாராயன் என்பவன் சிவனுக்கு கோயில் ஒன்றினை எழுப்பி அக்கோயிலுக்கு நிவந்தமாக நிலம் அளித்தான் என்கிற செய்தியைத் தருவதாலும், அதுபோலவே, தற்போது தங்கச் சுரங்கம் உள்ள கோலார் பகுதியின் ஶ்ரீனிவாசப்பூர் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு விக்ரம சோழன் அப்பகுதி சிவன் கோயிலுக்கு தனது ஆட்சிக்காலத்தின் பத்தாம் ஆண்டில் விமானம் அமைத்த செய்தியைக் குறிப்பிடுவதாலும், மேலும், விக்ரம சோழனின் கல்வெட்டுகள் வேங்கி நாட்டின் பல்வேறு இடங்களில் காணப்பட்டது போலவே கங்கபாடி நாட்டிலும் காணப்பெற்றதாலும் கங்கபாடி நாடானது விக்ரம சோழனது காலத்தில் சோழ இராச்சியத்தின் கீழ் மீண்டும் வந்ததை அறியமுடிகின்றது.

கலிங்கம் கொண்ட சோழன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
            இம்மன்னன் தனது இளமைப் பருவத்திலேயே, தந்தை முதலாம் குலோத்துங்க சோழனது காலத்தில், வேங்கி நாட்டின் அரசப் பிரதிநிதியாக இருந்தவேளையில், தென்கலிங்க மன்னன் தெலுங்க வீமனை வென்று வாகை சூடியதை கவிச்சக்கரவத்தி ஒட்டக்கூத்தர் தனது கலிங்கத்துப் பரணியில்


செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்
தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு
வருத்தந் தவிர்த்துலக காண்டபிரான்
மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே

எனப் புகழ்வதாலும்,

“ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே”

என விக்ரம சோழனுலாவில் குறிப்பிடுவதாலும்,
“தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப்
                   பரணி புனைந்த பரிதி - முரணிப்
                   புரந்தர னேமி பொருவ வகில
                   துரந்தரன் விக்கிரம சோழன்”

என இராசராச சோழனுலாவில் குறிப்பிடுவதாலும் விக்ரம சோழன் கலிங்க நாட்டை சோழப்பேரரசிற்கு அடிபணிய வைத்தமையை நன்கு அறியமுடிகின்றது.

விக்ரம சோழன் ஆட்சியின் சிறப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      இம்மன்னனது ஆட்சிக் காலத்தின்போது சோழ சாம்ராச்சியத்தில் பெரும் போர்கள் ஏதும் இல்லாத காரணத்தால் தனது சாம்ராச்சியத்திற்கு உட்பட்ட நாடுகளையெல்லாம் இம்மன்னன் நேரில் பார்த்து தனது நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து வந்தான் என்பதை இம்மன்னன் பல்வேறு ஊர்களிலிருந்து அனுப்பிய உத்திரவுகளிலிருந்து
அறிந்துகொள்ளலாம்.

   
மேலும், “மன்னுயிர்க்கெல்லாம் இன்னுயிர் தாய்போல் தண்ணனி பரப்பித் தனித் தனி பார்த்து மண்முழுதுங் களிப்ப” என்றும், மக்களிடையே குறையில்லாத வாழ்க்கை நிலவியதால் இம்மன்னனது அரண்மனை வாயிலில் கட்டியிருந்த மணி ஒலிக்காது நாவொடுங்கி இருப்பதாக –“தன் கோயிற் கொற்றவாயிற் புறத்து மணிநா வொடுங்க” என இவனது மெய்கீர்த்தி கூறுவதிலிருந்தும் விக்ரம சோழன் ஆட்சியில் சோழ சாம்ராச்சியத்தின் மக்கள் யாவரும் இன்னல்கள் ஏதுமின்றி இன்புற்று வாழ்ந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

(தொடரும்)

Saturday 10 May 2014

சோழ மன்னர்கள் Later Chola Kings XXIII விக்ரம சோழன் (முதலாம் பகுதி) Vikrama Chozhan (Part-I)






              





                                                                                                ( சோழ மன்னர்கள் -42.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி!

விக்ரம சோழன். (கி.பி.1118- 1135)
~~~~~~~ **** ~~~~~~~

(
முதலாம் பகுதி)
                                                                                

பிறந்த நாள்
~~~~~~~~~~~~~~


    தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ள சிவன்கூடல் என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில், அவ்வூரில் உள்ள கோயிலில் இம்மன்னன் பிறந்த ஆனித் திங்கள் உத்திரட்டாதி நாள் முதல் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்குக் கி.பி.1128ல் நிலம் அளிக்கபெற்ற செய்தி காணப்படுவதாலும், இம்மன்னனது ஆட்சிக்காலத்தில் தில்லை  மாநகரில் ஆண்டுதோறும் ஆனித் திங்கள் உத்திரட்டாதி நாளில் பெருவிழா நடைபெற்றதென்று இவனது மெய்கீர்த்தி உணர்த்துவதாலும் இம்மன்னன் ஆனித் திங்கள் உத்திரட்டாதி நந்நாளில் பிறந்தவன் என்பதை அறியலாம்.



வேங்கிநாட்டுப் பிரதிநிதி


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    முதலாம் குலோத்துங்கச் சோழனின் நான்காம் புதல்வனான விக்ரம சோழன் தனது இளமைப் பருவத்திலேயே தந்தை குலோத்துங்கச் சோழனால் வேங்கி நாட்டிற்கான சோழப் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டு ஆட்சி புரிந்துவந்தவனாவான்.


இளவரசுப் பட்டம்


~~~~~~~~~~~~~~~~~~


    கி.பி.1118ல் சோழ சாம்ராச்சியத்தின் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன். கி.பி. 1120ல் இவனது தந்தை    முதலாம் குலோத்துங்கச் சோழன் இறந்தவுடன் சோழநாட்டின் முடி சூடி அதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டனன்.


சோழநாட்டு அரியணை


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    சோழச் சக்ரவர்த்தியின் நான்காம் புதல்வனாயிருந்த போதும் இவன் அரியணை ஏறியதற்குக் காரணம் இவனது தமையன்களாகிய இராசராச சோழகங்கன், இராசராச மும்முடிச் சோழன் மற்றும் வீர சோழன் ஆகியோரர் முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்காலத்திலேயே இறந்துபோனதே ஆகும்.


பரகேசரி


~~~~~~~~~


          பிற்காலச் சோழமன்னர்கள் ஒருவர் பின்னொருவராய் மாறி மாறிப் புனைந்துகொண்ட இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டங்களுள் இம்மன்னன் பரகேசரி எனும் பட்டம் பூண்டு ஆட்சி செய்தான் என்பதை கல்வெட்டுக்கள் மூலம் அரியலாம்.


 


மெய்கீர்த்திகள்


~~~~~~~~~~~~~~~~


   

    கல்வெட்டுக்களில் விக்ரம சோழனுக்குறிய மெய்கீர்த்திகள் இரண்டு காணப்படுகின்றன. அவை முறையே, ‘‘ பூமாலை மிடைத்து பொன்மாலை திகழ்’’ எனத் தொடங்கும் ஒன்றும், ‘‘  பூமாதுப் புணர புவி மாது வளர ’’ எனத் தொடங்கும் மற்றொன்றும் ஆகும்.


  இம் மெய்கீர்த்திகள் இரண்டும் விக்ரம சோழனது ஆட்சிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு தொடங்கி அவனது ஆட்சிக்காலம் முழுமைக்குமாக காணப்படுகின்றன.


மேளைச் சாளுக்கியரிடமிருந்து வேங்கி நாட்டை மீட்டது


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    வேங்கி நாட்டில் இருந்த விக்ரம சோழன் கி.பி.1118ல் அங்கிருந்து புறப்பட்டு சோழநாடு திரும்பி ‘இளவரசு’ பட்டம் ஏற்றவுடன் வேங்கிநாடு குலோத்துங்கச் சோழனால் வெலநாண்டின் முதலாம் கொங்கனின் மகன் சோடன் என்பவனுக்கு அளிக்கப்பட்டது.


     இதனையறிந்த மேளைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன் வெலநாண்டு சோடனை வென்று வேங்கி நாட்டினை தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்தான்.


     கி.பி.1126 ல் ஆறாம் விக்கிரமாதித்தன் இறந்தபின் விக்ரம சோழனது முயற்சியால் மீண்டும் வேங்கி நாடு சோழப்பேரரசோடு இணைக்கப்பட்டதை அறிய முடிகிறது.