Friday 29 June 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-VI, Sembiyanmadhevi.


                                                (சோழ மன்னர்கள் -8.)
பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி!
செம்பியன்மாதேவி
~~~~~~~~~~~~~~~~~~~~
      சோழ மன்னர்கள் தம் நாட்டின் அரசியல் நிலை காரணமாக, பெருவலிமைபடைத்த பிறவேந்தர், குறுநில மன்னர் ஆகியோரின் தொடர்பினை நிலைநிறுத்தும்பொருட்டு அவர்களுடைய மகளிரை மணம் செய்துகொள்ள நேர்ந்தமையால் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை உடையவராயிருந்தனர்.
      ஆனால் செல்வந்தர்களும் அச்செயலை மேற்கொண்டது அவர்களின் செல்வச்செருக்கால் நிகழ்ந்ததேயன்றி வேறொன்றுமில்லை.
      அக்காலத்தில் பெண்மக்கள் எல்லாச்சிறப்புக்களும் எய்தியிருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது. பொதுவாக ஒருவனும் ஒருத்தியுமாக நிகழ்த்திய வாழ்க்கையே அக்காலத்தில் சிறப்புடையதாகக் கருதப்பட்டது.
     சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில், கணவனை இழந்த மகளிர் சிலர் பிரிவாற்றாமல் உடன்கட்டையேறி உயிர்துறந்துள்ளனர். எனினும், சோழ இராச்சியத்தில் அத்தகைய நிகழ்ச்சிகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் நிகழ்ந்துள்ளன.
     முதலாம் பராந்தக சோழன் காலத்திய வீரசோழ இளங்கோவன் என்னும் கொடும்பாளூர் குறுநில மன்னனின் மனைவி கங்கமாதேவி என்பவர் தீப்பாய்ந்து உயிர்நீத்த செய்தி திருச்சிராபள்ளி, அல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியமுடிகின்றது. இதுபோலவே பராந்தக சோழன் காலத்திற்குப் பின்னர் வந்த ஒரு சில சோழ அரசிகளும் உயிர்நீத்த செய்தியும் உள்ளன.

      இவ்வரிய செயல்கள் சில மகளிரின் உண்மையான விருப்பத்தையும், உள்ளம் உருகிய வேண்டுகளையும் மக்கள் மறுக்கமுடியாத நிலையில்தான் நிகழ்ந்துள்ளன என்பதையும் அரிய முடிகின்றது.
      கண்டராதித்த சோழனின் மனைவியர் இருவருள் இரண்டாம் மனைவியாகிய செம்பியன்மாதேவி மழநாட்டுச் சிற்றரசன் மகள் என்பதை “மழவரையர் மகளார் ஶ்ரீகண்டராதித்தபெருமாள் தேவியார் செம்பியன் மாதேவி” என்ற கல்வெட்டுப்பகுதியால் அறியலாம்.
      கண்டராதித்தனக்கு, அவனது இளைய சகோதரனுக்கு பிள்ளைகள் பிறந்த பின்னரும்கூட, மக்கட்பேறு இல்லாதிருந்து அவனது இறுதிகாலத்திலேயே ஒரு மகன் பிறந்தான். அவனே உத்தம சோழன்.

     உத்தமசோழன் சிறு பிள்ளையாயிருந்தபோது கண்டராதித்தன் இறந்துவிட, உடன்கட்டையேறும் பழக்கம் இருந்தகாலத்தில் தன் குழந்தையின் பொருட்டே உயிர்வாழ்ந்தவள் செம்பியன்மாதேவி.       

     இவ்வரசி அரிஞ்சய சோழன், சுந்தரசோழன், உத்தமசோழன் ஆகியோரின் ஆட்சிகாலங்களிலும் முதலாம் இராசராசசோழனின் ஆட்சியில் கி.பி.1001-ஆம் ஆண்டு வரையிலும் வாழ்ந்தவள் ஆவாள். இவள் தனது வாழ்நாளில் செய்த தொண்டுகள் பல.

    திருச்சிராப்பள்ளி, திருமழப்பாடிக்கருகில் உள்ள “செம்பியன்மாதேவிப் பேரேரி” இவ்வரசியால் அமைக்கப்பட்டதாகும்.

    சிவபக்தையான இவ்வரசி சோழ இராச்சியத்தில் செய்த பல்வேறு சமயத்தொண்டுகள் குறித்த கல்வெட்டுக்கள் மிகுதியாகவே காணப்படுகின்றன. செம்பியன் மாதேவியின் முற்சியால் சோழ நாட்டில் பல செங்கற் கோயில்களை கற்றளிகளாக (கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில்கள்) ஏற்படுத்தியமையை அறியமுடிகின்றது.

      கோயில்களில் ஒரு சில குறிப்பிட்ட காரியங்களை நாள்தோறுமாவது, திங்கள்தோறுமாவது, ஆண்டுவிழா நாட்களிலாவது தொடர்ந்து நடத்திவர கோயில்களுக்கு ‘இறையிலி’ இவ்வரசியால் அளிக்கப்பட்டதும் அறியமுடிகின்றது.

     பல கோயில்களுக்கு அணிகலன்கள் அளித்தும், பொன்னாலும் வெள்ளியாலும் பலவகை கலங்கள் செய்து கொடுத்துள்ளதும் அறியமுடிகின்றது.

     செம்பியன்மாதேவி கற்றளிகளாக அமைத்த கோயில்கள் விருத்தாசலம், திருநல்லம், திருக்கோடிகா, தென்குரங்காடுதுறை, செம்பியன்மாதேவி, திருவாரூர் அரநெறி, திருதுருத்தி, ஆநாங்கூர், திருமணஞ்சேரி, திருவக்கரை என்னும் ஊர்களில் உல்ல சிவாலயங்களாகும்.

    இவற்றில் திருநல்லம் என்னுமூரில் சிவனுக்கு கற்றளி அமைத்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும், விழாக்களுக்கும் நிவந்தமாக நிலங்களை அளித்திருப்பதோடல்லாமல் அக்கோயிலுக்கு ‘ஶ்ரீகண்டராதித்தம்’ என தன் கணவன் பெயரையே அளித்திருப்பதும், அவ்விறைவனைத் தன் கணவன் வழிபடுவதுபோல் ஒரு படிவம் அமைத்திருப்பதும் அவள் தன் கணவன் பால் வைத்திருந்த பேரன்பையே புலப்படுதுகின்றது.

     முதலாம் இராசராசசோழனின் ஆட்சியின் 16-ஆம் ஆண்டாகிய கி.பி.1001-ல் திருவக்கரைக் கோயிலை கற்றளியாக அமைத்ததே இவ்வரசி புரிந்த இறுதிப் பணியாகும்.
     முதலாம் இராசராசசோழனின் மகனாகிய கங்கை கொண்ட சோழன் செம்பியன்மாதேவியிலுள்ள திருக்கயிலாயமுடையார் கோவிலில் இவ்வரசியின் படிமத்தினை அமைத்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான்.
(ஓவியம் ம.செ. வினுடயது என்னால் எடுத்தாளப்பட்டது.)

Friday 22 June 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-V, Kandaradhithan.

(சோழ மன்னர்கள்-7)

நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !

கண்டராதித்த சோழன். (கி.பி. 950 - 957).  
     
     முதற் பராந்தக சோழன் இறந்த பின்னர், அவனது இரண்டாம் புதல்வனும் ஏற்கனவே இளவரசு பட்டம் சூட்டப் பட்டிருந்தவனுமாகிய கண்டராதித்த சோழன் கி.பி.953ல் முடி சுட்டப்பெற்றுச் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியானான். இவன் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து அரசாண்டான்.

     இம்மன்னனது கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் காணப்படாமையால் சோழர்க்கு திறை செலுத்திக் கொண்டு சிற்றரசனாய் வாழ்ந்து வந்த வீரபாண்டியன் என்பவன் கண்டராதித்தன் காலத்தில் சுயேட்சை அடைந்து பாண்டி நாட்டில் தனியரசு புரியத் துவங்கியிருத்தல் வேண்டும், மேலும் வீரபாண்டியனது கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் காணப்படுவதாலும் இது உறுதியாகின்றது.
   
     மேலும் கண்டராதித்தனது தந்தையின் காலத்தில் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணாதேவன் தொண்டை மண்டலத்தையும் திருமுனைப்பாடி நாட்டையும் கவர்ந்து கொண்டதாலும் இவை நீங்கிய சோழ நாடு மாத்திரம் இவனது ஆட்சிக்குட்பட்டிருந்தது.
    
     இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணாதேவன் தான் வென்ற தொண்டை மண்டலத்தையும் திருமுனைப்பாடி நாட்டையும் தன்பால் அடைக்கலம் புகுந்திருந்த வைதும்பராய மன்னனுக்கு அவற்றையளித்துத் தன் பிரதிநிதியாயிருந்து ஆண்டுவர ஏற்பாடு செய்தான்.
   
     கண்டராதித்த சோழனுக்குச் சோழ இராச்சியம் இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தாலும் அது அவனது காலத்தில் முழுதும் நிறைவேறவில்லை. இம்முயற்சியில் ஓரளவே வெற்றிபெற்றான் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
    
     இவனது காலத்தில் தொண்டைமண்டலத்திலிருந்த, தற்சமய புதுவைப் பகுதிகளை இவன் போரிட்டு மீட்டதை புதுவையருகே உள்ள கண்டமங்கலம், மற்றும் இம்மன்னனது மனைவி செம்பியன் மாதேவி பெயரில் அமைந்த “செம்பியப் பாளையம்” ஆகிய ஊர்களின் பெயர்களால் அறியமுடிகின்றது.

     கண்டராதித்த சோழன், காவிரியாற்றிற்கு வடக்கே கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊர் ஒன்றை அமைத்தான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் கூறுகின்றன. அது திருச்சிராப்பள்ளி, உடையார் பாளையம், கொள்ளிட ஆற்றிற்கு வடகரையில் திருமழப்பாடிக்கு மேற்கே ஒரு மைல் தொலைவில் இந்நாளில் சிற்றூராக உள்ளது. இப்போது அதனைக் கண்டி ராச்சியம் என்று அழைக்கின்றனர்.

     தென்னார்க்காடு உலகபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டால் கண்டராதித்தப்பேரேரி என்ற நீர்நிலை ஒன்றிருந்ததை அறியமுடிகின்றது அவ்வேரி இம்மன்னன் காலத்தில் அமைக்கப் பெற்றிருத்தல்வெண்டும்.

    கண்டராதித்த சோழன் சிவபக்தியும் தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப்பெற்றவன். தில்லையம்பதி நடராசன் மீது இவன் பாடிய திருப்பதிகம் ஒன்று சைவத்திருமுறைகளுல் ஒன்றான ஒன்பதாம் திருமுறையில் இருப்பதை அறியமுடிகின்றது. அப்பதிகத்தில் இவ்வரசன் தன்னைக் “கோழி வேந்தன்” எனவும் ‘தஞ்சையர்கோன்” எனவும் கூறியிருப்பதையும் அறியலாம்.

    கண்டராதித்த சோழனுக்கு மும்முடி சோழன் என்ற பெயரும் உண்டு. சிதம்பரம், உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டில் இம்மன்னனை “மேற்கெழுந்தருளிய தேவர்” என குறிப்பிடுவதால் சோழநாட்டிற்கு மேற்கே உள்ள நாடுகளுக்கு இம்மன்னன் தலயாத்திரை சென்று திரும்பியதை உணர்த்துகின்றது. “சிவஞான கண்டராதித்தர்” என்ற மற்றுமொரு குறிப்பினால் தன் அரசை துறந்து சிவஞானியாய் அங்ஙனம் போயிருக்கலாம்.

     மைசூர் இராச்சியத்தில் நந்தி என்னும் ஊரிலுள்ள ஒரு சிவன் கோவிலில் ஓர் அரச படிமம் உள்ளது. அது சோழ மன்னரது படிமம் என்று அங்கு அழைக்கப்படுகின்றது, யோகத்தில் வீற்றிருக்கும் நிலையில் அமைந்திருப்பாதால் அது இம் மன்னனை நினவு கூறும்பொருட்டு வைத்தமையாயிருக்கலாம்.
 
      கண்டராதித்த சோழனுக்கு இரு மனைவியர்: வீரநாரணீ, செம்பியன் மாதேவி என்போர். இவர்களுல் வீரநாரணியே முதல் மனைவி, இவள் கண்டராதித்தன் முடிசூட்டப்பெறுவதற்கு முன்னரே இறந்தனள்.

     கண்டராதித்தனுக்கு பல ஆண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாதிருந்து இறுதியில் செம்பியன் மாதேவி மூலம் ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு மதுராந்தகன் எனவும் உத்தம சோழன் எனவும் பெயர். தன் மகன் சிறு குழந்தையாயிருந்ததால் கண்டராதித்தன் தன் சகோதரன் அரிஞ்சயனுக்கு கி.பி. 954 ல் இளவரசு பட்டம் கட்டி அரசியலில் பழக்கினான். மதுராந்தகன் இளைய பிராயத்தனனாயிருந்தபோது கண்டராதித்த சோழன் கிபி. 957ல் இறந்தான்.

     செம்பியன் மாதேவி தன் இளம் புதல்வன் மேல் வைத்த அன்பினால் அவனை சிறப்புடன் வளர்ப்பதையே கடமையாகக் கொண்டு கணவனைப் பிரிந்தும் உயிருடன் இருந்தனள். இக் காலத்தில் கோனேரிராசபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் என்னுமூரில் சிவனுக்கு தன் கணவன் பெயரால் கண்டராதித்தம் என்னுங் கற்றளி (பாராங்கற்களால் ஆன கோயில்) அமைத்து அவ்விறைவனைத் தன் கணவன் வழிபடுவதுபோல் ஒரு படிவம் வைத்திருப்பதை அறியலாம்.

(ஓவியம் ம.செ.வினுடையது)

Saturday 9 June 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-IV, Paranthagan I

(சோழ மன்னர்கள்-4)
நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !

முதலாம் பராந்தக சோழன். (கி.பி. 907 - 953).
~~~~~~~~~~~~*******~~~~~~~~~~~~~~~

        ஆதித்த சோழன் கி.பி.907ல் இறந்தவுடன் அவன் புதல்வனாகிய பராந்தக சோழன் தஞ்சைமாநகரில் சோழ இராச்சியத்திற்கு சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பெற்றான். இவ்வேந்தன் பரகேசரி என்ற பட்டமுடையவன்.

         (முதலாம்)பராந்தகன் சோழஆட்சியை ஏற்றுக்கொண்ட காலத்தில் தொண்டைமண்டலம், வடக்கேயுள்ள திருக்காளத்தி வரையில் சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தது, அதோடு கொங்கு மண்டலமும் இவன் ஆளுகைக் குட்பட்டிருந்தது.

          தனது தந்தையால் உயர்நிலைக்குக் கொண்டுவரப்பட்ட சோழ இராச்சியத்தை ஈடும் இணையுமற்ற சீரிய நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்பதே இவனது பெருவிருப்பமாய் இருந்தது. இதனை நிறைவேற்றுமளவுக்கு பெரிய வீரனாகவும் இவன் இருந்தான்.அதோடு இவனது ஆட்சி 46 ஆண்டுகள் நடைபெற்றதும் அதற்கு உற்றதுணையாக அமைந்தது.

பாண்டி நாட்டை வென்றது:-
~~~~~~~~~~~~~~~~~~~~~
        முதலாம் பராந்தக சோழன் கி.பி.910 ஆம் ஆண்டில் பாண்டி நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அக்காலத்தில் பாண்டி நாட்டினை ஆண்ட மூன்றாம் இராச சிம்ம பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றினான்.இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டின் கல்வெட்டுக்கள் “மதுரையை வென்ற கோப்பரகேசரி வர்மன்” என்று கூறுகின்றன.

      தோல்வியடைந்த இராச சிம்ம பாண்டியன் இலங்கை வேந்தனாகிய ஐந்தாம் காசிபனை தனக்கு துணப்படை தந்து உதவுமாறு வேண்டினான். அதற்கிணங்க இலங்கை வேந்தனும் பெரும் படையொன்றை அனுப்பினான்.

       தன்படையொடு ஈழப்படையையும் சேர்த்துக்கொண்ட இராச சிம்மன் முதலாம் பராந்தக சோழனோடு வெள்ளூரில் போரிட்டான். இப்போரில், பராந்தகன், அளவற்ற வீரர்களையும் யானைகளையும், குதிரைகளையும் கொன்று குவித்து பெரும் வெற்றி பெற்றான்.

      இராச சிம்மனது சின்னமனூர் செப்பேடுகள் கூற்றின்படி பராந்தகனுக்கும் இராச சிம்மனுக்கும் இடையே அடிக்கடி போர்கள் நடந்து, அவற்றில் சில இராச சிம்மனுக்கு வெற்றியை தந்ததை அறியமுடிகின்றது. எனினும் இராச சிம்மனுடன் வெள்ளூரில் நடத்திய இறுதிப்போரில் பராந்தாகன் வெற்றி பெற்று பாண்டிமண்டலத்தைக்
கைப்பற்றினான்.

      இப்போர் கி.பி.919ல் நடைபெற்றிருத்தலை கீழைப் பழுவூர், திருபாற்கடல் கல்வெட்டுக்கள் மூலமும் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்தின் மூலமும் அறியலாம்.

ஈழநாட்டை வென்றது:-
~~~~~~~~~~~~~~~~~

      இராச்சியத்தை இழந்த இராச சிம்மன் தன் முன்னோர்களிடமிர்ந்து கிடைத்த சுந்தர முடியையும், ஏனைய பாண்டி நாட்டு அரச சின்னங்களையும் எடுத்துக்கொண்டு சிங்களத்திற்கு சென்று நான்காம் தப்புலன் பால் உதவிபெருமாறு அங்கு தங்கியிருந்தான். எனினும் அங்கு தங்கியிருப்பதால் பயனில்லை என்பதை உணர்ந்த இராச சிம்மன் தான் கொணர்ந்த முடி மற்றும் அரச சின்னங்களை அம்மன்னனிடமே அடைக்கலப்பொருளாய் வைத்துவிட்டு தன் தாயின் பிறந்தகமாகிய சேரநாடு சென்று வாழ்ந்தான்.

      பாண்டி நாட்டில் நடந்த நீண்டகால உள்நாட்டு கலகங்களையும் குழப்பங்களையும் அடக்கியபின் மதுரையில் தனுக்கு முடிசூட்டு விழா நடத்த முயன்றபோது பாண்டி நாட்டிற்குறிய முடியும் பிற அரச சின்னங்களும் அங்கு இல்லாமையையும் அவை இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டதையும் அறிந்த பராந்தகன் அவற்றை ஒப்படைக்க இலங்கைக்கு தூதனுப்பினான்.

     அம்மன்னன் மறுக்கவே அவற்றை கவர்ந்து வர அந்நாட்டின் மீது பராந்தகன் படையெடுக்கக் கருதி பெரும் படையொன்றை அனுப்பினான். அப்போரில் சோழர்படை வெற்றிபெறவே இலங்கை மன்னன் இலங்கையின் தென்கீழ் பகுதியான ரோகண நாட்டிற்கு போய்விட பாண்டி நாட்டு முடி இல்லாமலே பராந்தகனின் படை நாடு திரும்பியது.

      இவ்வரலாற்றை இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்தில் காணலாம். இவனது ஆட்சியின் 37ஆம் ஆண்டு கல்வெட்டுக்களால் இப்போர் கி.பி.944 ஆம் ஆண்டிற்கு முன்னர் நடந்திருக்கவேண்டும் என்பதை அரியலாம்.

      முதலாம் பராந்தக சோழன் பாண்டிநாட்டையும் ஈழநாட்டையும் வென்ற செய்தி, கலிங்கத்துப்பரணியிலும் குலோத்துங்க சோழனுலாவிலும் சொல்லப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

வாணகப்பாடி நாட்டை வென்றது:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் மாவட்டம் வரையில் அமைந்திருந்த நிலப்பரப்பே வாணகப்பாடி நாடாகும். இதனை வாணர் என்போர் ஆண்டுவந்தனர். தொண்டைமண்டலம் பல்லவ ஆட்சிக்குட்பட்டிருக்கையில் இவ்வாணர் குலமன்னர்கள் பல்லவர்களுக்குத் திறை செலுத்திக்கொண்டு குறுநில மன்னராய் இருந்துவந்தனர்.

      பராந்தகனின் தந்தை ஆதித்த சோழன் பல்லவன் அபராஜிதவர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றியபின் வாணர் சுயேட்சை எய்தி தனியரசு புரிந்து வந்தமையால் இவர்களை வென்றடக்குவது பராந்தகனுக்கு அவசியமாயிற்று. அம்முயற்சியில் பராந்தகன், கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி உதவியுடன் வாணகப்பாடி நாட்டை வென்றான்.


      வாணகப்பாடி நாட்டை வென்ற போரில் வாணர்க்கு உதவிய வைதும்ப வேந்தர்களையும் பராந்தகன் வெல்லவே வாணர் குல வேந்தனும் வைதும்ப குல வேந்தரும் இராஷ்ட்ரகூடனாகிய மூன்றாம் கிருஷ்ண்தேவனிடம் அடைக்கலம் புகுந்து தக்க நேரம் பார்த்திருந்தனர்.

      பராந்தகனது ஆட்சியின்போது சோழ நாடு, தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே நெல்லூர் வரை பரவியிருந்தது. இவ்வாறிருந்த காலத்தில், வடபுலத்தே இராஷ்ட்ரகூட சிங்காதனத்திற்கு ஏற்பட்ட மோதலில் தோல்வியடைந்த பராந்தகனின் தங்கையின் கணவனான நான்காம் கோவிந்தன் தஞ்சையில் அடைக்கலம் புகுந்தபோது அவனது நாட்டை மீட்டுத்தர பராந்தகன் உறுதியளித்தான். அதன்பொருட்டு கி.பி 939ல் நான்காம் கோவிந்தனுக்கு உதவச்சென்ற சோழர் படை இரட்டை மண்டலப் பொரில் தோல்வியைத் தழுவ மூன்றாம் கிருஷ்ண்தேவன் வெற்றிபெற்று இராஷ்ட்ரகூடச் சிங்காதனத்தைக் கைப்பற்றினான்.

       தன் தங்கையின் கணவனுக்காக செய்த முயற்சியின் பயனாக மூன்றாம் கிருஷ்ணதேவன் பராந்தகனுக்கு பெரும் பகைவனான்.

      சோழராச்சியத்தின் வடமேற்கே இருந்த, பராந்தகன் மீது பெருமதிப்பு வைத்திருந்த கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி கி.பி.940ல் இறந்தான், இம்மன்னன் வாழும்போதே அவனது மகன் இறந்துவிட கங்கருள் மற்றொரு கிளையைச் சேர்ந்தவனும் பராந்தகனுடன் பகைமை கொண்டவனுமான மூன்றாம் கிருஷ்ண்தேவனின் தமக்கையின் மகன் இரண்டாம் பூதுகனின் ஆட்சிக்குள்ளாயிற்று கங்க நாடு.

       வடபுலத்தே தனக்கு பகைவர் தோன்றியுள்ளதை உணர்ந்த முதலாம் பராந்தகன் தன் மூத்தமகனும் பெரு வீரனுமாகிய இராசாதித்தனை பெரும் படையோடு தொண்டைநாட்டில், திருநாவலூரில் இருந்துகொண்டு சோழ ராச்சியத்தின் வடபகுதியை கண்காணித்துவரச்செய்தான். இராசாதித்தன் அவ்வாரு செய்துவருங்காலத்தில் பலகாலம் காத்திருந்து, தன் படைகளைப் பெருக்கிக்கொண்ட, இராஷ்ட்ரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணதேவன் சோழ இராச்சியத்தின்மீது கி.பி. 949 ல் படையெடுத்தான், அவனுக்கு உதவ கங்க மன்னன் பூதுகனும் தன் படையோடு வந்தான்.

தக்கோலப் போர் (கி.பி. 949):-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      இராஷ்ட்ரகூடப் படையும் கங்கப் படையும் ஒருசேர சோழ இராச்சியத்தின் வட பகுதியிலிருந்த தொண்டைமண்டல நாட்டைத் தாக்கின. அந்நாளில் சோழ இராச்சியத்தின் வடபகுதியை கண்காணித்துவந்த இள்வரசன் இராசாதித்த சோழன் வடவேந்தர் படையெடுப்பைத் தடுத்துப் போர்புரியத் தொடங்கினான்.

     வடஆர்க்காடு, அரக்கோணத்திலிருந்து ஆறுமைல் தூரத்திலுள்ள தக்கோலம் என்ற ஊரில் இரு பெரும் படைகளும் கடும் போர் புரிந்தன. சோழ நாட்டுப் படையினர் சிறிதும் அஞ்சாது போர்புரிந்தனர்.வெற்றி எவர்பக்கமோ என்று ஐயப்படும் சூழலில் கங்க மன்னன் பூதகன் விடுத்த அம்பொன்று யானை மீதிருந்து போரிட்ட இராசாதித்தன் மார்பில் தைக்கவே அவன் வீரமரணமடைந்தான். இந்நிகழ்ச்சியால் சோழப் படைகள் மனமுடைந்துபோகவே இராஷ்ட்ரகூடப் படைகள் ஊக்கத்தோடு போர் புரிந்து வெற்றி எய்தின.

     பெங்களூரு அருங்காட்சியகத்தில் உள்ள ஆதகூர்க் கல்வெட்டொன்று, பூதுகன் யானைமீது வீற்றிருந்த இராசாதித்தனை கொன்றதற்காக அவனைப் பாராட்டி பல பரிசுகளை மூன்றாம் கிருஷ்ணதேவன் அளித்தான் எனக் கூறுவதாய் ஆரச்சியாளர்கள் கூறுவர்.

     கும்பகோணம், திருவிடைமருதூர் கல்வெட்டுக்கள் இராசாதித்தனை “ஆனைமேற்றுஞ்சினார்” என்று குறிப்பிடுவதால் இராசாதித்தன் யானைமேல் வீற்றிருந்தபோது உயிர் துறந்த செய்தி உறுதிப் படுகின்றது.

     தக்கோலப் போரின் வெற்றியால் இராஷ்ட்ரகூடர் வசம் தொண்டைமண்டலமும் திருமுனைப்பாடியும் வீழ்ந்தது. எனினும், இராஷ்ட்ரகூட மன்னன் தஞ்சையையும் வென்றான் என்ற ஒரு கூற்றும் நிலவுவதுண்டு.

   ஆயினும், தொண்டைமண்டலத்தின் தெற்கே மூன்றாம் கிருஷ்ணதேவனின் கல்வெட்டுக்கல் ஏதும் காணப்படாமையால் அவன் தஞ்சையை கைப்பற்றியதாய் புனைந்துரைக்கப்படதை அறியலாம்.

   ஆனால் அதேகாலகட்டத்தில் சோழ நாட்டில் முதலாம் பராந்தகன், கண்டராதித்தன், இரண்டாம் பராந்தகன் என்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களே அந்நாடெங்கும் வரயப்பெற்றிருக்கின்றன.

    இவற்றால் சோழநாடு மட்டில் இராஷ்ட்ரகூடன் ஆட்சிக்கு உட்படாது சோழ மன்னர் ஆளுமையிலேயே அமைந்திருந்ததை தெளிவாக அறியலாம்.

    தக்கோலப் போர் நிகழ்ச்சியால் சோழ இராச்சியம் சுருங்கிய நிலை எய்திற்று எனலாம். சோழர் பேரரசு தன் உயர் நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்தது என்பதிலும் ஐயமில்லை.

    முதலாம் பராந்தக சோழனுக்கு நான்கு புதல்வர்களும், இரு மகள்களும் ஆவர். அவர்கள், இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என்ற நான்கு புதல்வர்களும், வீரமாதேவி, அனுபமா ஆகிய மகள்கள் ஆவர்.

    முதலாம் பராந்தக சோழன், தன் மூத்தமகன் இராசாதித்தனின் வீரமரணத்தால் ஆற்றொணாத் துன்பம் அடைந்தபோதிலும், இரண்டாம் மகன் கண்டராதித்த சோழனுக்கு கி.பி.950ஆம் ஆண்டில் இளவரசு பட்டம் கட்டி அரசாங்க அலுவல்களைக் கவனித்துவருமாறு செய்தான்.

   முதலாம் பராந்தக சோழனுக்கு வீரநாராயணன், வீரசோழன், குஞ்சரமல்லன், இருமடி சோழன், சங்கிராமராகவன், பண்டிதவற்சலன் என வேறு பெயர்களும் உண்டு.



குடஓலை:-
~~~~~~~~~~~
  முதலாம் பராந்தக சோழன் காலத்தில் குடவோலை மூலம் கிராமசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும், கிராம சபை அமைக்கும் முறையும் கிராம ஆட்சி முறையும் எவ்வாறு இருந்தன என்பதையும் செங்கற்பட்டு உருத்திரமேரூரிலும், வேரு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்கள் கூறுவதிலிருந்து இவ் வேந்தனது ஆட்சித் திறத்தையும் அரசியல் முறைகளையும் நன்கு அறியமுடிகின்றது.

    இவற்றின் மூலம், ஏறத்தாழ 1060 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர் முறையான குடியாட்சிக்கு வித்திட்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் என்பது புலப்படுகின்றது.

நீர்ப்பாசனம்:-
~~~~~~~~~~~~~
காவிரிக் கரை:-
முதலாம் பராந்தக சோழன் காலத்தில் காவிரி ஆற்றின் கரைகளை அமைத்து வலுப்படுத்தி வந்தமைப் புலப்படுகின்றது. காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு  வளம்பெருக்கிய கரிகால் பெருவளத்தானின் நினைவாய் காவிரியாற்றின் வடகரையை கரிகாலக்கரை என்றே மக்களால்  அழைக்கப்பட்டமையும் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றது.

வீராணம் ஏரி
:-
~~~~~~~~~~~~~~
    சோழ மன்னர்கள் காவிரி ஆற்றின் நீர்ப் பெருக்கை வேறு ஆறுகள் மூலமாகத் திருப்பி தம் நாட்டை வெள்ளப் பெருக்கினின்று காக்கவும், பாசன வசதி பெற்று நாட்டை வளப்படுத்தவும் மண்ணி, கொள்ளிடம், கடுவாய், வெண்ணி என்ற ஆறுகளை வெட்டினர் என்பது புலப்படுகின்றது. 
  
    அப்படி பேராறுகளின் கிளைகளாகப் புதிய ஆறுகள் வெட்டுவதற்கு இயலாத நிலையிலுள்ள பெரு நிலப்பரப்புகளில் ஆங்காங்கு ஏரிகள் அமைத்து உழவுத்தொழில் இனிதாய் நடைபெறும் பொருட்டு ஏரிகளை ஏற்படுத்துவது சோழ மன்னர்களது வழக்கம்.

     அதன்படியே கொள்ளிடத்தினின்று வடவாறு அமைத்து அதன் வழியே காவிரி நீரைக் கொணர்ந்து தேக்கிப் பாசன வசதி ஏற்படுத்தும்பொருட்டு தற்சமயம் (முன்னர் தென்ஆர்காடு, தற்சமய கடலூர் மாவட்ட) வீராணம் என்றழைக்கப்படும் வீரநாராயண ஏரியையும், வடஆற்காடு மாவட்டதில் சோழவாரிதி ஏரியையும் முதலாம் பராந்தகன் ஏற்படுத்தினான்.
      முதலாம் பராந்தக சோழனுடைய அரசியல் அதிகாரிகளுல் ஒருவனும் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூருடையானும் ஆகிய அருள் நிதி கலியன் என்பான் மதுரை, ஆனைமலை பக்கதிலுள்ள நரசிங்கமங்கலத்தில் கலியனேரி என்னும் எரியொன்றை அமைத்து அதிலிருந்து நீர்பாய்ந்து நிலங்களில் ஆண்டு முழுதும் நெல் விளையுமாறு செய்தான் என்று அவ்வூரிலுள்ள நரசிங்கப்பெருமாள் கோயிலில் வட்டெழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டால் அறியமுடிகின்றது.

ஏரிவாரியம்:-
~~~~~~~~~~~~
      ஏரிகளை ஆண்டுதோறும் ஆழமாக வெட்டியும் கரைகளை உயரமாகக் கட்டியும் மழைக்காலத்தில் தண்ணீரால் நிரப்பியும் பொதுமக்களுக்கு பயன்படுமாறு செய்து வந்தவர்கள் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உள் கழகத்தினரே ஆவர். அவர்கள் ஏரிவாரிய பெருமக்கள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளனர்.

வரி:-
~~~~~
    இப் பராமரிப்ப்புக்காக பொதுமக்களால் பொருளும் நிலங்களும் அளிக்கப்பட்டு வந்தமையும் அவ்வாறு அளிக்காத ஊர்களில் ஏரியினால் பாசனம் பெறும் நிலங்களை அனுபவிப்போரிடமிருந்து நிலங்களின் அளவுக்கு ஏற்றவாறு வரி வாங்கப்பட்டதையும் அறியமுடிகின்றது.

நாணயம்:-
~~~~~~~~~~    
    முதலாம் பராந்தக சோழன் காலத்தில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. கழஞ்சு, புதிய அக்கம் என்ற நாணயங்கள் குறித்து திருவற்றியூர் மற்றும் ஆனைமலைக் கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.
     இரண்டு குன்றிமணி கொண்டது ஒரு மாஞ்சாடியாகும், இருபது மாஞ்சாடிகள் கொண்டது ஒரு கழஞ்சு என வழங்கி வரப்பட்டுள்ளது.

      பராந்தக சோழனின் 46ஆம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டுக்கள் சோழநாட்டில் கண்டியூர், திருச்சோற்றுத்துறை ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. அவ்வாண்டிற்கு பிறகு இவனது கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. ஆகவே முதலாம் பராந்தகன், எஞ்சியிருந்த சோழ இராச்சியத்தை சில ஆண்டுகள் ஆண்டபின் கி.பி 953ல் இறந்திருக்கவேண்டும் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

  (ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)

சோழ மன்னர்கள் Later Chola Kings-III, Adhithan I.

( சோழ மன்னர்கள் -3.)

நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !

முதலாம் ஆதித்த சோழன். (கி.பி. 881- 907)
~~~~~~~ **** ~~~~~~~
கி.பி.871 லேயே இளவரசு பட்டம் சூட்டப்பெற்ற ஆதித்தன் கி.பி. 881ல் தனது தந்தை விசயாலய சோழன் இறந்தவுடன் சோழநாட்டின் முடிசூடி அதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டனன். இவன் ராசகேசரி என்ற பட்டம் புனைந்துகொண்டு அரசாண்டான், இவனுக்கு கோதண்டராமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

திருப்புறம்பயத்தில் நடைபெற்றப் போரில் தோல்வியுற்ற பாண்டியமன்னன் வரகுண பாண்டியன் பின்னர் துறவுபூணவே அவனது சகோதரன் வீரநாராயணன் பாண்டிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றான்.

சோழமண்டலத்தின் ஒரு பகுதியை சோழரது ஆட்சிக்குள் கொண்டு வந்தாலும் மற்றொருபகுதி பல்லவரிடமே இருந்துவந்ததால் ஆதித்த சோழன் தன் ஆட்சியின் இருபதாம் ஆண்டிற்குப்பின் பல்லவர் வசமிருந்த அப்பகுதியை கைப்பற்ற தொண்டைமண்டலம் மீது போர்தொடுத்தான்.

அப்போரில், யானைமீதிருந்து போரிட்ட பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் மீது பாய்ந்து அவனைக் கொன்றான் ஆதித்தன் என கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.

தொண்டைமண்டலப் போரில் பல்லவ மன்னனைக் கொன்றதன் மூலம் பல்லவ சாம்ராஜ்ஜியம் முழுமையும் சோழரின் ஆட்சிக்குள்வர சோழ மண்டலத்தின் வடஎல்லை ராஷ்ட்ரகூடம் வரையாயிற்று.

ஆதித்தன், பாண்டியமன்னன் வீரநாராயணன் வசமிருந்த கொங்கு நாட்டையும் வென்றான்.கொங்கு நாட்டை வென்று அங்கிருந்து பொன் கொணர்ந்து தில்லை சிற்றம்பலமுகட்டை (சிதம்பரம் நடராஜர்கோயில் கூரை) அப்பொன்னால் வேய்ந்தான்.

இதனை நம்பியாண்டார் நம்பி, தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில், “சிங்கத் துருவனைச்
செற்றவன் சிற்றம் பலமுகடு- கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் ” எனப்பாடுவார்.

இப்படி பல்லவ ராஜ்ஜியத்தையும் பாண்டியர் பகுதியையும் வென்ற முதலாம் ஆதித்தன் சேரநாட்டோடு நட்பு பாராட்டி வந்தான் என்பதை சேரமன்னன் தாணுரவியின் மகளைத் தன் மகன் பராந்தகனுக்கு மணமுடித்ததிலிருந்து அறியமுடியும்.

சோழன் முதலாம் ஆதித்தனது காலத்தில் அவன் ஆட்சிக்குட்பட்ட தொண்டைநாட்டிலுள்ள கோயில் ஒன்றிற்கு கங்க நாட்டு மன்னன் இரண்டாம் பிருதிவிபதி, வெள்ளி கெண்டி அளித்தான் என்ற கல்வெட்டு செய்தியிலிருந்து ஆதித்தன் கங்க நாட்டொடும் நட்பாயிருந்தான் என்பதும் புலப்படும்.

ஆதித்த சோழன் தனது ஆட்சிக்காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர் சமயத் தொண்டு புரிவதற்கு தொடங்கியிருக்கவேண்டும். அதன் பயனாய் காவிரியாற்றின் இருமருங்கிலும் பல சிவாலயங்களை கட்டியுள்ளான்.

திருப்புறம்பய போரில் பெற்றவெற்றியால் சோழமண்டலம் முழுதும் மீண்டும் சோழர் ஆட்சி புரியும்பேறு கிடைத்ததால் பெரு மகிழ்ச்சியுற்ற இவ்வேந்தன் அவ்வூரில் அரிய சிற்பத்திறங்கள் அமைந்த பெருங் கற்றளியாக (கறுங்கற் பாறைகளால் ஆன கோயில் ) ஒரு கோயில் எழுப்பி அதற்கு ஆதித்தேச்சுரம் எனும் பெயரும் வழங்கினான் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆதித்த சோழனுக்கு இருமனைவியர் இருந்தனர். அவர்கள் இளங்கோப்பிச்சி, திரிபுவனமாதேவியாகிய வயிரியக்கன் ஆகியோர் ஆவர். இவர்களுள் வல்லவராயன் மகளும் ஆதித்தனின் முதல் மனைவியுமாகிய இளங்கோப்பிச்சி பட்டத்தரசி ஆவாள்.

முதலாம் ஆதித்தனுக்கு இரு புதல்வர், அவர்கள் பராந்தகன், கன்னரதேவன் ஆகியோர். இவர்களுள் பராந்தகனே போராற்றலும் மூத்தவனுமாயிருத்தலால் இவனே ஆதித்த சோழனுக்குப் பின்னர் பட்டத்திற்கு வந்தவன் ஆவான்.

முதலாம் ஆதித்த சோழன் சித்தூர் மாவட்டத்தில் திருக்காலத்திக்கு அருகாமையிலுள்ள தொன்டைமான் பேராற்றூரில் கி.பி.907-ம் ஆண்டில் இறந்தனன். அவ்வூர் இக்காலத்தில் தொண்டமானாடு என்று வழங்கபடுகின்றது.

அங்கு முதற்பராந்தக சோழன் தன் தந்தை முதலாம் ஆதித்த சோழனின் நினைவாக ஒரு பள்ளிப்படையாக (அரசனது சமாதிக்கோயில் பள்ளிபடை என்று அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது) ஒரு கோயிலை ஏற்படுத்தினான் என்பது அக்கோயிலுள்ள கல்வெட்டால் அறியப்படுகின்றது.

தன் தந்தையின் பள்ளிபடையாகிய கோதண்டராமேசுவரத்தில் புரட்டாசித்திங்களில் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்கும் அவ்விழா நாட்களில் ஆயிரவர்க்கு நாள்தோறும் உணவளிக்கவும் முதற்பொருளாக நூற்றைந்து கழஞ்சு பொன் பராந்தக சோழனால் கொடுக்கப்பட்டுள்ளது.

(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)


சோழ மன்னர்கள் Later Chola Kings-II, Vijayalaya I.

(சோழ மன்னர்கள் -2.)

நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !

சோழன் விசயாலயன். (கி.பி.846-881)


முத்தரையர் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சையையும் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட ஒரு சிறு நாட்டை, தஞ்சை மாநகருக்கு மேற்கே தற்போது செந்தலை என்றழைக்கப்படும், சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலத்தில் இருந்து கொண்டு ஆட்சி செய்துகொண்டிருந்தனர்.

முன்பு பல்லவ மன்னர்களின் கீழ் ஆட்சி செய்துவந்த இவர்கள் பாண்டிய மன்னர்கள் பக்கம் சேரவே சோழ இராச்சியத்தை மீட்க தக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்த விசயாலயன் கி.பி 846 ம் ஆண்டில் முத்தரைய மன்னனைத் தாக்கி தஞ்சையைக் கைப்பற்றிக்கொண்டான். அதிலிருந்து சற்றேறக்குரைய 400 ஆண்டுகள் தஞ்சை சோழர் வசத்திலியே இருந்தது.

பாண்டியர் வசமிருந்த சோழ மண்டலத்தின் தென்பகுதியை திரும்ப கைப்பற்றுவதற்காக சோழன் விசயாலயன், பல்லவர் கங்க நாட்டு மன்னர் ( கங்க நாடென்பது மைசூர் ராஜ்ஜியத்தின் தென்பகுதியும் சேலம் மாவட்டதின் வட பகுதியும் அடங்கிய நாடு) மற்றும் மகதர் ஆகியோரின் துணை கொண்டு பாண்டியன் மாறவர்மனை எதிர்த்து கி.பி.854-ஆம் ஆண்டில் குடமூக்கில் (இப்போதய கும்பகோணம்) போரிட்டான்.

ஆனால் அம்முயற்சியில் தொல்வியுற்ற விசயாலயன், பல்லவன் நிருபதுங்க வர்மன், இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனுடன் சேர்ந்து கி.பி. 862-ம் ஆண்டில் அரிசிலாற்றங்கறையில் நடைபெற்ற போரில் பாண்டியன் மாறவர்மனை தோற்கடித்தான்.

இவ்வெற்றியால் கைப்பற்றப்பட்ட சோழ மண்டலத்தின் ஒரு பகுதி சோழன் விசயாலயனது ஆட்சிக்கும் மற்றொரு பகுதி பல்லவன் ஆட்சிக்கும் உட்பட்டதாயிற்று.

சோழ மன்னர்கள் எல்லோரும் இராசகேசரி, பரகேசரி எனற பட்டங்களையும் ஒருவர்பின் ஒருவராக மாறி மாறி புனைந்து கொண்டிருந்தனர் அவற்றுள் பரகேசரி எனும் பட்டத்தை புனைந்து கொண்டவன்தான் விசயாலயன்!

விசயாலயன் சற்றேறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கின்றான்.

பல்லாண்டுகளாய் தாழ்ந்த நிலையில் புகழ் குன்றிக் கிடந்த சோழ இராச்சியத்தை மீண்டும் நிறுவி அதனை உயர் நிலைக்கு கொண்டுவர, சோழப் பேரரசுக்கு அடிகோலிய முதல் மன்னன் ஆனதால் தன் வாழ்நாள் முழுதும் பல போர்களைப் புரிந்து காலங்கழித்த நிலையால் விசயாலயன் தன் மார்பில் தொண்ணூற்றாறு புண்கொண்டவன்.

இதை “தொண்ணூற்றின் மேலுமிரு மூன்று புண்கொண்ட வென்றிப் புரவலனுங்..” எனப் புகழ்ந்து பாடுவர் ஒட்டக்கூத்தர்!

கி.பி.871-ம் ஆண்டு தன் புதல்வன் ஆதித்த சோழனுக்கு இளவரசு பட்டம் கட்டி அரசியலில் ஈடுபடச்செய்தான்.

மாறவர்ம பாண்டியன் இறந்தபின் அவனது மகன் இரண்டாம் வரகுனன் தன் தந்தை இழந்த சோழ நாட்டுப் பகுதியை மீண்டும் கைப்பற்ற எண்ணினான். அச்சமயம் சோழமண்டலத்தின் ஒரு பகுதியை ஆண்டுவந்த பல்லவன் நிருபதுங்கன் இறக்கவே அவன் புதல்வன் அபராஜிதன் முடிசூடி ஆட்சியை கைக்கொண்டான்.

மற்றொரு பகுதியை ஆளும் விசயாலயன் முதுமை எய்தி வலி குன்றிருக்கவே இதுவே தக்க சமயம் என்றெண்ணிய இரண்டாம் வரகுன பாண்டியன் கி.பி.880-ம் ஆண்டில் சோழர் பகுதியை தாக்கினான்.

கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள மணியாற்றின் வடகரையிலுள்ள திருப்புறம்பயத்தில் பெரும் போர் நடைபெற்றது.

விசயாலயனின் புதல்வனும் இளவரசனுமாகிய முதல் ஆதித்த சோழன் பல்லவர் மற்றும் கங்கர் படைகளின் துணையோடு பாண்டியனைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடினான்.

இவ்வெற்றியால் மகிழ்ச்சியுற்ற பல்லவன் அபராஜித வர்மன் பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழமண்டலத்தின் மற்றொரு பகுதியை ஆதித்த சோழனுக்கு அளித்தான்.

இவ்வாறு, இப்போரின் பயனாக சோழர் முடி மன்னராகி சோழ மண்டலம் முழுமையும் ஆட்சிபுரியும் பேறு பெற்றனர்.

சோழர் ஆட்சி மிண்டும் நிலை பெற ஏதுவாயிருந்த இத் திருப்புறம்பயப் பெரும் போரை ஆங்கிலேயர் நடத்திய பிளாசிப் போருக்கு ஒப்பாகக் கூறலாம்.

தன் வாழ் நாள் முழுதும் போர் புரிந்து சோழப் பேரரசுக்கு அடிகோலிய விசயாலய சோழன் கி.பி.881-ம் ஆண்டு இறந்தான்.

புதுகோட்டை, நார்த்தமலைப் பகுதியில் ஒரு குன்றின் மேல் சோழன் விசயாலயன் ஏற்படுத்திய விசயாலய சோழேச்சுரம் என்ற கோயிலை இன்றும் காணலாம்.

(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)

சோழ மன்னர்கள் Later Chola Kings- I, Prologue.


(சோழ மன்னர்கள் -1.)

பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !

சோழ மன்னர்கள்
~~~~~~~~~~~~~

வட வேங்கடம், தென்குமரிக்கு இடையேயான நிலப்பரப்பே முற்காலத்தில் தமிழகம் என்று அழைக்கப்பட்டது. பண்டைக்காலத்தில் இதனை ஆட்சி புரிந்தோர் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆவர்.

இதில் தமிழகத்தின் கீழ்ப்பகுதியை தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்த அரச மரபினர் சோழர்கள் ஆவர்.

சங்க காலச் சோழ மன்னர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் முடிந்தது என்பது ஆராச்சியாளர்களின் ஆராய்வில் கண்டறியப்பட்ட ஒன்று.

இக் கடைச் சங்க காலத்திற்கு முற்பட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சோழமண்டலத்தை ஆட்சிபுரிந்த சோழமன்னர்கள் காந்தன், தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன், இளஞ்சோட்சென்னி, கரிகாலன், கிள்ளி வளவன், நலங்கிள்ளி, கோப்பெரு நற்கிள்ளி, பெருவறற்கிள்ளி, நெடுங்கை கிள்ளி, மாவளத்தான், செங்கணான், நல்லடி என்போரின் வரலாறு மிகச் சுருக்கமாகவே கடைச் சங்க நூல்களான புறநானூறு, அகநானூறு, முதலான நூல்களில் காணப்படுகின்றன.

சங்க காலத்திற்குபின் கி.பி.9 ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டதில் சோழர்கள் பற்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தரும் செய்திகள் இவர்கள் சோழநாட்டில் இருந்தார்கள் என்ற அளவில் மட்டுமே உணர்த்தும். இதற்கு காரணம் இவர்கள் தாழ்ந்த நிலையை அடைந்து பிற வேந்தருக்கு அடங்கி வாழ்ந்திருக்க வேண்டும்.

பிற்காலச் சோழர்கள்
~~~~~~~~~~~~~~~~

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவ முதலில் அடிகோலியவன் கி.பி. 9ம் நூற்றாண்டின் இடையில் தோன்றிய விசயாலயன் என்னும் சோழ மன்னனே ஆவான்.

சோழன் விசயாலயன் கி.பி.846-881
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குமாராங்குசன் என்ற சோழ மன்னனுக்கு புதல்வனாய் பிறந்தவன் விசயாலயன். இவ் விசயாலயன் வழித் தோன்றிய மன்னர்களே பிற்காலச் சோழர்கள் ஆவர் ..ராசராச சோழன் உள்பட…..

(ஓவியம்-ம.செ.வினுடயது..என்னால் எடுத்தாளப்பட்டுள்ளது)