Saturday 23 February 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XVII, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-2) Kulothunga Chozhan I (part-2).


                                              (சோழ மன்னர்கள் -36.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).   (இரண்டாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன் புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

உள்நாட்டுக் குழப்பமும் முடிசூடலும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     சோழ நாடு அரசன் இல்லாது அல்லலுற்ற வேளையில், குறுநில மன்னர்களின் கலகம் ஒருபுறமாயும், உள்நாட்டில் குழப்பம் மறுபுறமுமாயிருக்க சோழ நாட்டு மக்கள் யாவரும் அரசன் இல்லாது பெரும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.

      இவ்வாறு சோழ நாடு மன்னன் இல்லாது நிலைகுலைந்து இருந்த செய்தியை அறிந்த, அக்காலத்தே வடபுலத்தில் போரில் ஈடுபட்டிருந்த, முதலாம்
குலோத்துங்கனாகிய இராசேந்திரன் கங்கைகொண்ட சோழனின் மகள் வழிப்பேரன் எனும் உரிமையை அடிப்படையாகக் கொண்டு சோழ நாட்டின் அரச உரிமையைப் பெற்று அந்நாட்டினை ஆளலாம் எனும் எண்ணத்தோடு கங்கைகொண்ட சோழபுரம் விரைந்தான்.

    அங்கிருந்த அமைச்சர்கள், படைத்தளபதி முதலான அரசியல் அதிகாரிகள் அனைவரும் இவ்வரசகுமாரன் சரியான தருணத்தில் வந்தமைக்கு மகிழ்ந்து, சோழ நாட்டினை ஆள இவனுக்குள்ள அரச உரிமையையும் ஏற்றுக் கோண்டு சோழர் மரபில் அந்நாட்டினை ஆள வேறு எவரும் இல்லாத காரணத்தால் சோழ நாட்டினை ஆளும் உரிமையை இவனுக்கே அளிப்பது என்று உறுதி செய்தனர்.

   அவ்வறே, இவனுக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன.

       கி.பி.1070 ஆம் ஆண்டு சூன் திங்கள் 9 ஆம் நாளில் சோழ நாட்டின் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராசராச
நரேந்திரனின் மகனாகிய இராசேந்திரன் சோழ நாட்டின் மன்னனாய் முறைப்படி முடிசூட்டப்பெற்றான். முடிசூட்டப்பெற்ற அந்நாளில் முதலாம் குலோத்துங்கன் என்னும் அபிடேகப் பெயரும் பெற்றான்.

முதலாம் குலோத்துங்கன் முடிசூட்டப்பெற்றது குறித்த ஐயங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      இம்மன்னன் சோழ நாட்டு ஆட்சியைப் பெற்றது குறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடத்தே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
     
              
அதில் ஒன்று, பில்ஹணர் எனும் வடமொழிப் புலவர், தான் எழுதிய, மேலைச்சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்ரமாதித்தனின் வரலாற்றில், அதிராசேந்திர சோழனுக்கு முடிசுட்டுவிழா நடக்கவிருந்தபோது ஏற்பட்ட உள்நாட்டு கலகத்தில் அவன் கொல்லப்பட்டதாய்  கூறுகின்றார் என்பது.

              
பில்ஹணர் கூறியவாறு இருக்க வாய்ப்பில்லை என்பதற்கு சான்றாய் விளங்குவது, அதிராசேந்திர சோழனது தந்தையின் காலத்திலேயே  அவனுக்கு அடுத்து ஆட்சிக்கு வருபவன் இவனே’ என்று அறிவிப்பதாய் சோழர் குல வழக்கபடி இளவரசு பட்டம் சூட்டப்பட்டது என்பதே.

      மேலும்,  சோழமன்னன் அதிராசேந்திர சோழனது ஆட்சிக்காலத்தில் கலகம் விளைந்ததாய்  கல்வெட்டுக்கள் இல்லை மாறாக அவனது அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அவனோடு இருந்து கோவிலுக்கு இறையிலி அளித்தார்கள் என்றும் மக்களால் போற்றப்பட்டவன் என்பதுவுமே கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

      அவ்வாறே மக்களால்
 பெரிதும் போற்றப்பட்டு பெரும்புகழுடன் வாழ்ந்து வந்தவன் அம்மன்னன் என்பது அதிராசேந்திர சோழனின் மெய்கீர்த்தியிலிருந்தும் புலப்படும்.

     மேலும், முதலாம் குலோத்துங்கன், சோழ இராச்சியத்தைக்  கைப்பற்ற சோழ நாட்டில் கலகம் ஏற்படச்செய்து அதிராசேந்திர சோழனைக் கொன்றிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கூறுவர்.  

         அரசன் இன்றி அவதியுற்றது சோழநாடு”  என்று கலிங்கத்துப் பரணியும், “நோய்வாய்ப்பட்டிருந்தான் மன்னன்” என்ற அதிராசேந்திர சோழன் காலத்துக்  கல்வெட்டுச்செய்தியும்  உறுதிசெய்வதால் அச்செய்தியும்  உண்மையல்ல என்பதையே புலபடுத்துகின்றது.

     இவையன்றி, கங்கைகொண்ட சோழனின் மனைவி, தன்
 பேரனாகிய இவனை சுவீகாரம் எடுத்துக்கொண்டாள் என்றும் சிலர்
கூறுவர். கங்கைகொண்ட சோழனுக்கு இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன்,  சுந்தர சோழபாண்டியன்  என்றழைக்கப்பட்ட  இராசமகேந்திரன் எனும் புதல்வர்கள்  இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுவதால் அவன் மனைவி இவனை
சுவீகாரம் எடுத்துக்கொண்டாள் என்பதும் பொருந்தாமல் போகின்றது.

   மேலும், கலிங்கத்துப் பரணி இவனை அவள் பாராட்டியதாய்க் கூறுகிறதே அன்றி சுவீகாரம் எடுத்துக்கொண்டாள் என்பதை உணர்த்தவில்லை என்பதை காண்க.

இராசகேசரி
~~~~~~~~~~~~~
     முதலாம் குலோத்துங்க சோழன் முடிசூட்டப் பெற்றதும், சோழர் குல மரபையொட்டி, இராசகேசரி என்ற பட்டப் பெயர் புனைந்து ஆட்சிபுரியலானான்.

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )

[ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]

Friday 8 February 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XVI, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-1) Kulothunga Chozhan I (part-1).



                                              (சோழ மன்னர்கள் -35.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).   (முதலாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன் புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }
 
பிறப்பு.
~~~~~~~
         இம்மன்னன் தந்தை வழியிற் சோழர்குல மரபினன் அல்ல, ஆயினும் தாய் வழியிற் சோழர் குல மரபினன் என்பதில் அய்யமில்லை.

      முதலாம் இராசராச சோழனுக்கு இராசேந்திரன் என்ற ஒரே புதல்வனும் இரு புதல்வியரும் பிறந்தனர்.  புதல்வியருள் மூத்தவள் மாதேவடிகள், இளையவள் குந்தவை ஆவர். இக்குந்தவை கீழச்சாளுக்கிய மன்னனாகிய விமலாத்தித்தனுக்கு மணமுடிக்கப்பட்டாள்.
    
      
இராசராச சோழன் மகனும் ‘ கடாரங்கொண்டான் ’, ‘ கங்கை கொண்ட சோழன் ‘ என்றெல்லாம் அறியப்பட்ட முதலாம் இராசேந்திரனின் இரு புதல்விகளுள்  அம்மங்கைதேவி என்பவள், கிழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழனின் மகள் குந்தவைக்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்னும் அரசகுமாரனுக்கு மணஞ் செய்துவிக்கபட்டனள். இவர்களுக்குப் பிறந்த புதல்வனே, பெருவீரனாகிய முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆவான்.
 

பூச நாள்
~~~~~~~~~
        குண்டூர், பாபட்லாவிலுள்ள கோயில் கல்வெட்டினாலும், தற்போது  பெண்ணாடம் என அழைக்கப்படும் பெண்ணாகடம் எனும் ஊரின் கோயிலில், இம்மன்னனின் நலன்பொருட்டு, திங்கள்தோறும் பூச நாளில் விழா நடத்திவர நிவந்தம் அளிக்கப்பட்ட செய்தியிலிருந்தும்           இம்மன்னன் பூச நாளில் பிறந்தவன் என்பதை  அறியமுடிகின்றது.

இயற்பெயர்
~~~~~~~~~~~~

    இம்மன்னது இயற்பெயர் இராசேந்திரன் என்பதை செல்லூர் செப்பேடுகளினால் அறியலாம். பாட்டன் பெயர்  பேரனுக்கு இடப்படுவது
பண்டையகால வழக்கம் என்பதால் இவனுக்கு அவனது பாட்டன் இராசேந்திரனது பெயரே சூட்டபட்டது இயல்பே. அதோடு, இவன் தனது வடிவால் கங்கை கொண்ட சோழன் போன்றே இருந்ததாலும் அவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது என்றும் அறியப்படுகின்றது.

இளமைப்பருவம்
~~~~~~~~~~~~~~~~~~
                    முதலாம் குலோத்துங்கன் தனது தந்தைவழியில் கீழைச்சாளுக்கிய
மரபினனாய் இருந்தாலும் அவன் சோழ மண்டலத்தில் தன் தாய்வழிப் பாட்டனது அரண்மனையிற் பிறந்து வளரந்து, தமிழ்மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்டு பயின்று தமிழ் மக்களின் பண்புகளையும் வழக்கங்ஙளையும் மேற்கொண்டிருந்தான் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

         இவன், தனது தந்தையும் வேங்கி நாட்டு அரசனுமான  இராசராச நரேந்திரனது ஆட்சிக்காலத்திலேயே அந்நாட்டின் இளவரசனாய் பட்டம் சூட்டப்பெற்று, ‘விஷ்ணுவர்த்தனன்’ என்னும் அபிஷேகப் பெயர் கொண்டவனாவான் என்பதை வேங்கி நாட்டில் காணப்படும் இவனது கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றது.

       இவன், இளவரசனாய் பட்டம் சூட்டப்பட்டிருந்தாலும், இவனது தந்தையின் மறைவுக்குப்பின் வேங்கி நாட்டின் ஆட்சி உரிமையைப் பெற இயலாமல் போனதற்குக் காரணம் இவனது சிறியதந்தையான விசயாதித்தன் என்பவன் வேங்கி நாட்டினை ஆள பெரு விருப்பம் காட்டியதே ஆகும். அக்காலத்தே, சோழ இராச்சியத்தை ஆண்டுவந்த இவனது மாமன் இரண்டாம் இராசேந்திரன் மேளைச் சாளுக்கியரோடு போர் புரிவதில் ஈடுபட்டிருந்ததாலும், தன் நாட்டின் நலன்கருதி கலகம் விளைவிக்க விரும்பாததாலும்,  இவனால் வேங்கியின் மீது தனக்கிருந்த ஆட்சி உரிமையை நிலை நிறுத்துவது இயலாமல் போயிற்று எனலாம்.

       விசயாதித்தன் வேங்கியில் ஆட்சிபுரிந்துவந்தபோது குலோத்துங்கன் சோழச்சக்ரவர்த்தியாக வீற்றிருந்து பல மன்னர்களோடு ஈடுபட்ட போர்களுள் சிலவற்றில் தனது அம்மானுக்கு உதவியாயிருந்தான் என்றும் அறியப்படுகின்றது.

        மேலும்,      சோழச்சக்ரவர்த்தி வீரராசேந்திரன் கடாரத்து அரசனுக்கு உதவ அனுப்பிய, கடராத்துக்குச் சென்ற, பெரும் படையின்
தலைவர்களுள் இக் குலோத்துங்கனும் ஒருவனாவான் என்பதிலிருந்தும் இவன் தனது இளமைக்காலத்தே, சிறப்பான போர்ப் பயிற்சி பெற்ற, ஒப்பற்ற வீரணாகத் திகழ்ந்தான் என்பதை அறியலாம்.

      சோழநாட்டில், வீரராசேந்திரனது காலத்திற்குப்பின், சிலதிங்கள் வரையில் அரசாண்ட  வீரராசேந்திரனது புதல்வன் அதிராசேந்திர சோழன் கி.பி.1070 ஆம் ஆண்டின் இடைக்காலத்தில் கடும் நோய்வாய்ப்பட்டு இறந்தனன்.

     அதிராசேந்திர சோழனுக்கு மகப்பேறு இல்லாத காரணத்தாலும், சோழர் மரபில் வேறு அரசகுமாரன் ஒருவனும் இல்லாமையாலும் சோழநாடு ஒருசில காலம் அரசன் இல்லாது அல்லலுற்றது.

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும்)

(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)