Saturday 9 June 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-IV, Paranthagan I

(சோழ மன்னர்கள்-4)
நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !

முதலாம் பராந்தக சோழன். (கி.பி. 907 - 953).
~~~~~~~~~~~~*******~~~~~~~~~~~~~~~

        ஆதித்த சோழன் கி.பி.907ல் இறந்தவுடன் அவன் புதல்வனாகிய பராந்தக சோழன் தஞ்சைமாநகரில் சோழ இராச்சியத்திற்கு சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பெற்றான். இவ்வேந்தன் பரகேசரி என்ற பட்டமுடையவன்.

         (முதலாம்)பராந்தகன் சோழஆட்சியை ஏற்றுக்கொண்ட காலத்தில் தொண்டைமண்டலம், வடக்கேயுள்ள திருக்காளத்தி வரையில் சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தது, அதோடு கொங்கு மண்டலமும் இவன் ஆளுகைக் குட்பட்டிருந்தது.

          தனது தந்தையால் உயர்நிலைக்குக் கொண்டுவரப்பட்ட சோழ இராச்சியத்தை ஈடும் இணையுமற்ற சீரிய நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்பதே இவனது பெருவிருப்பமாய் இருந்தது. இதனை நிறைவேற்றுமளவுக்கு பெரிய வீரனாகவும் இவன் இருந்தான்.அதோடு இவனது ஆட்சி 46 ஆண்டுகள் நடைபெற்றதும் அதற்கு உற்றதுணையாக அமைந்தது.

பாண்டி நாட்டை வென்றது:-
~~~~~~~~~~~~~~~~~~~~~
        முதலாம் பராந்தக சோழன் கி.பி.910 ஆம் ஆண்டில் பாண்டி நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அக்காலத்தில் பாண்டி நாட்டினை ஆண்ட மூன்றாம் இராச சிம்ம பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றினான்.இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டின் கல்வெட்டுக்கள் “மதுரையை வென்ற கோப்பரகேசரி வர்மன்” என்று கூறுகின்றன.

      தோல்வியடைந்த இராச சிம்ம பாண்டியன் இலங்கை வேந்தனாகிய ஐந்தாம் காசிபனை தனக்கு துணப்படை தந்து உதவுமாறு வேண்டினான். அதற்கிணங்க இலங்கை வேந்தனும் பெரும் படையொன்றை அனுப்பினான்.

       தன்படையொடு ஈழப்படையையும் சேர்த்துக்கொண்ட இராச சிம்மன் முதலாம் பராந்தக சோழனோடு வெள்ளூரில் போரிட்டான். இப்போரில், பராந்தகன், அளவற்ற வீரர்களையும் யானைகளையும், குதிரைகளையும் கொன்று குவித்து பெரும் வெற்றி பெற்றான்.

      இராச சிம்மனது சின்னமனூர் செப்பேடுகள் கூற்றின்படி பராந்தகனுக்கும் இராச சிம்மனுக்கும் இடையே அடிக்கடி போர்கள் நடந்து, அவற்றில் சில இராச சிம்மனுக்கு வெற்றியை தந்ததை அறியமுடிகின்றது. எனினும் இராச சிம்மனுடன் வெள்ளூரில் நடத்திய இறுதிப்போரில் பராந்தாகன் வெற்றி பெற்று பாண்டிமண்டலத்தைக்
கைப்பற்றினான்.

      இப்போர் கி.பி.919ல் நடைபெற்றிருத்தலை கீழைப் பழுவூர், திருபாற்கடல் கல்வெட்டுக்கள் மூலமும் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்தின் மூலமும் அறியலாம்.

ஈழநாட்டை வென்றது:-
~~~~~~~~~~~~~~~~~

      இராச்சியத்தை இழந்த இராச சிம்மன் தன் முன்னோர்களிடமிர்ந்து கிடைத்த சுந்தர முடியையும், ஏனைய பாண்டி நாட்டு அரச சின்னங்களையும் எடுத்துக்கொண்டு சிங்களத்திற்கு சென்று நான்காம் தப்புலன் பால் உதவிபெருமாறு அங்கு தங்கியிருந்தான். எனினும் அங்கு தங்கியிருப்பதால் பயனில்லை என்பதை உணர்ந்த இராச சிம்மன் தான் கொணர்ந்த முடி மற்றும் அரச சின்னங்களை அம்மன்னனிடமே அடைக்கலப்பொருளாய் வைத்துவிட்டு தன் தாயின் பிறந்தகமாகிய சேரநாடு சென்று வாழ்ந்தான்.

      பாண்டி நாட்டில் நடந்த நீண்டகால உள்நாட்டு கலகங்களையும் குழப்பங்களையும் அடக்கியபின் மதுரையில் தனுக்கு முடிசூட்டு விழா நடத்த முயன்றபோது பாண்டி நாட்டிற்குறிய முடியும் பிற அரச சின்னங்களும் அங்கு இல்லாமையையும் அவை இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டதையும் அறிந்த பராந்தகன் அவற்றை ஒப்படைக்க இலங்கைக்கு தூதனுப்பினான்.

     அம்மன்னன் மறுக்கவே அவற்றை கவர்ந்து வர அந்நாட்டின் மீது பராந்தகன் படையெடுக்கக் கருதி பெரும் படையொன்றை அனுப்பினான். அப்போரில் சோழர்படை வெற்றிபெறவே இலங்கை மன்னன் இலங்கையின் தென்கீழ் பகுதியான ரோகண நாட்டிற்கு போய்விட பாண்டி நாட்டு முடி இல்லாமலே பராந்தகனின் படை நாடு திரும்பியது.

      இவ்வரலாற்றை இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்தில் காணலாம். இவனது ஆட்சியின் 37ஆம் ஆண்டு கல்வெட்டுக்களால் இப்போர் கி.பி.944 ஆம் ஆண்டிற்கு முன்னர் நடந்திருக்கவேண்டும் என்பதை அரியலாம்.

      முதலாம் பராந்தக சோழன் பாண்டிநாட்டையும் ஈழநாட்டையும் வென்ற செய்தி, கலிங்கத்துப்பரணியிலும் குலோத்துங்க சோழனுலாவிலும் சொல்லப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

வாணகப்பாடி நாட்டை வென்றது:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் மாவட்டம் வரையில் அமைந்திருந்த நிலப்பரப்பே வாணகப்பாடி நாடாகும். இதனை வாணர் என்போர் ஆண்டுவந்தனர். தொண்டைமண்டலம் பல்லவ ஆட்சிக்குட்பட்டிருக்கையில் இவ்வாணர் குலமன்னர்கள் பல்லவர்களுக்குத் திறை செலுத்திக்கொண்டு குறுநில மன்னராய் இருந்துவந்தனர்.

      பராந்தகனின் தந்தை ஆதித்த சோழன் பல்லவன் அபராஜிதவர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றியபின் வாணர் சுயேட்சை எய்தி தனியரசு புரிந்து வந்தமையால் இவர்களை வென்றடக்குவது பராந்தகனுக்கு அவசியமாயிற்று. அம்முயற்சியில் பராந்தகன், கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி உதவியுடன் வாணகப்பாடி நாட்டை வென்றான்.


      வாணகப்பாடி நாட்டை வென்ற போரில் வாணர்க்கு உதவிய வைதும்ப வேந்தர்களையும் பராந்தகன் வெல்லவே வாணர் குல வேந்தனும் வைதும்ப குல வேந்தரும் இராஷ்ட்ரகூடனாகிய மூன்றாம் கிருஷ்ண்தேவனிடம் அடைக்கலம் புகுந்து தக்க நேரம் பார்த்திருந்தனர்.

      பராந்தகனது ஆட்சியின்போது சோழ நாடு, தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே நெல்லூர் வரை பரவியிருந்தது. இவ்வாறிருந்த காலத்தில், வடபுலத்தே இராஷ்ட்ரகூட சிங்காதனத்திற்கு ஏற்பட்ட மோதலில் தோல்வியடைந்த பராந்தகனின் தங்கையின் கணவனான நான்காம் கோவிந்தன் தஞ்சையில் அடைக்கலம் புகுந்தபோது அவனது நாட்டை மீட்டுத்தர பராந்தகன் உறுதியளித்தான். அதன்பொருட்டு கி.பி 939ல் நான்காம் கோவிந்தனுக்கு உதவச்சென்ற சோழர் படை இரட்டை மண்டலப் பொரில் தோல்வியைத் தழுவ மூன்றாம் கிருஷ்ண்தேவன் வெற்றிபெற்று இராஷ்ட்ரகூடச் சிங்காதனத்தைக் கைப்பற்றினான்.

       தன் தங்கையின் கணவனுக்காக செய்த முயற்சியின் பயனாக மூன்றாம் கிருஷ்ணதேவன் பராந்தகனுக்கு பெரும் பகைவனான்.

      சோழராச்சியத்தின் வடமேற்கே இருந்த, பராந்தகன் மீது பெருமதிப்பு வைத்திருந்த கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி கி.பி.940ல் இறந்தான், இம்மன்னன் வாழும்போதே அவனது மகன் இறந்துவிட கங்கருள் மற்றொரு கிளையைச் சேர்ந்தவனும் பராந்தகனுடன் பகைமை கொண்டவனுமான மூன்றாம் கிருஷ்ண்தேவனின் தமக்கையின் மகன் இரண்டாம் பூதுகனின் ஆட்சிக்குள்ளாயிற்று கங்க நாடு.

       வடபுலத்தே தனக்கு பகைவர் தோன்றியுள்ளதை உணர்ந்த முதலாம் பராந்தகன் தன் மூத்தமகனும் பெரு வீரனுமாகிய இராசாதித்தனை பெரும் படையோடு தொண்டைநாட்டில், திருநாவலூரில் இருந்துகொண்டு சோழ ராச்சியத்தின் வடபகுதியை கண்காணித்துவரச்செய்தான். இராசாதித்தன் அவ்வாரு செய்துவருங்காலத்தில் பலகாலம் காத்திருந்து, தன் படைகளைப் பெருக்கிக்கொண்ட, இராஷ்ட்ரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணதேவன் சோழ இராச்சியத்தின்மீது கி.பி. 949 ல் படையெடுத்தான், அவனுக்கு உதவ கங்க மன்னன் பூதுகனும் தன் படையோடு வந்தான்.

தக்கோலப் போர் (கி.பி. 949):-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      இராஷ்ட்ரகூடப் படையும் கங்கப் படையும் ஒருசேர சோழ இராச்சியத்தின் வட பகுதியிலிருந்த தொண்டைமண்டல நாட்டைத் தாக்கின. அந்நாளில் சோழ இராச்சியத்தின் வடபகுதியை கண்காணித்துவந்த இள்வரசன் இராசாதித்த சோழன் வடவேந்தர் படையெடுப்பைத் தடுத்துப் போர்புரியத் தொடங்கினான்.

     வடஆர்க்காடு, அரக்கோணத்திலிருந்து ஆறுமைல் தூரத்திலுள்ள தக்கோலம் என்ற ஊரில் இரு பெரும் படைகளும் கடும் போர் புரிந்தன. சோழ நாட்டுப் படையினர் சிறிதும் அஞ்சாது போர்புரிந்தனர்.வெற்றி எவர்பக்கமோ என்று ஐயப்படும் சூழலில் கங்க மன்னன் பூதகன் விடுத்த அம்பொன்று யானை மீதிருந்து போரிட்ட இராசாதித்தன் மார்பில் தைக்கவே அவன் வீரமரணமடைந்தான். இந்நிகழ்ச்சியால் சோழப் படைகள் மனமுடைந்துபோகவே இராஷ்ட்ரகூடப் படைகள் ஊக்கத்தோடு போர் புரிந்து வெற்றி எய்தின.

     பெங்களூரு அருங்காட்சியகத்தில் உள்ள ஆதகூர்க் கல்வெட்டொன்று, பூதுகன் யானைமீது வீற்றிருந்த இராசாதித்தனை கொன்றதற்காக அவனைப் பாராட்டி பல பரிசுகளை மூன்றாம் கிருஷ்ணதேவன் அளித்தான் எனக் கூறுவதாய் ஆரச்சியாளர்கள் கூறுவர்.

     கும்பகோணம், திருவிடைமருதூர் கல்வெட்டுக்கள் இராசாதித்தனை “ஆனைமேற்றுஞ்சினார்” என்று குறிப்பிடுவதால் இராசாதித்தன் யானைமேல் வீற்றிருந்தபோது உயிர் துறந்த செய்தி உறுதிப் படுகின்றது.

     தக்கோலப் போரின் வெற்றியால் இராஷ்ட்ரகூடர் வசம் தொண்டைமண்டலமும் திருமுனைப்பாடியும் வீழ்ந்தது. எனினும், இராஷ்ட்ரகூட மன்னன் தஞ்சையையும் வென்றான் என்ற ஒரு கூற்றும் நிலவுவதுண்டு.

   ஆயினும், தொண்டைமண்டலத்தின் தெற்கே மூன்றாம் கிருஷ்ணதேவனின் கல்வெட்டுக்கல் ஏதும் காணப்படாமையால் அவன் தஞ்சையை கைப்பற்றியதாய் புனைந்துரைக்கப்படதை அறியலாம்.

   ஆனால் அதேகாலகட்டத்தில் சோழ நாட்டில் முதலாம் பராந்தகன், கண்டராதித்தன், இரண்டாம் பராந்தகன் என்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களே அந்நாடெங்கும் வரயப்பெற்றிருக்கின்றன.

    இவற்றால் சோழநாடு மட்டில் இராஷ்ட்ரகூடன் ஆட்சிக்கு உட்படாது சோழ மன்னர் ஆளுமையிலேயே அமைந்திருந்ததை தெளிவாக அறியலாம்.

    தக்கோலப் போர் நிகழ்ச்சியால் சோழ இராச்சியம் சுருங்கிய நிலை எய்திற்று எனலாம். சோழர் பேரரசு தன் உயர் நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்தது என்பதிலும் ஐயமில்லை.

    முதலாம் பராந்தக சோழனுக்கு நான்கு புதல்வர்களும், இரு மகள்களும் ஆவர். அவர்கள், இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என்ற நான்கு புதல்வர்களும், வீரமாதேவி, அனுபமா ஆகிய மகள்கள் ஆவர்.

    முதலாம் பராந்தக சோழன், தன் மூத்தமகன் இராசாதித்தனின் வீரமரணத்தால் ஆற்றொணாத் துன்பம் அடைந்தபோதிலும், இரண்டாம் மகன் கண்டராதித்த சோழனுக்கு கி.பி.950ஆம் ஆண்டில் இளவரசு பட்டம் கட்டி அரசாங்க அலுவல்களைக் கவனித்துவருமாறு செய்தான்.

   முதலாம் பராந்தக சோழனுக்கு வீரநாராயணன், வீரசோழன், குஞ்சரமல்லன், இருமடி சோழன், சங்கிராமராகவன், பண்டிதவற்சலன் என வேறு பெயர்களும் உண்டு.



குடஓலை:-
~~~~~~~~~~~
  முதலாம் பராந்தக சோழன் காலத்தில் குடவோலை மூலம் கிராமசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும், கிராம சபை அமைக்கும் முறையும் கிராம ஆட்சி முறையும் எவ்வாறு இருந்தன என்பதையும் செங்கற்பட்டு உருத்திரமேரூரிலும், வேரு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்கள் கூறுவதிலிருந்து இவ் வேந்தனது ஆட்சித் திறத்தையும் அரசியல் முறைகளையும் நன்கு அறியமுடிகின்றது.

    இவற்றின் மூலம், ஏறத்தாழ 1060 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர் முறையான குடியாட்சிக்கு வித்திட்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் என்பது புலப்படுகின்றது.

நீர்ப்பாசனம்:-
~~~~~~~~~~~~~
காவிரிக் கரை:-
முதலாம் பராந்தக சோழன் காலத்தில் காவிரி ஆற்றின் கரைகளை அமைத்து வலுப்படுத்தி வந்தமைப் புலப்படுகின்றது. காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு  வளம்பெருக்கிய கரிகால் பெருவளத்தானின் நினைவாய் காவிரியாற்றின் வடகரையை கரிகாலக்கரை என்றே மக்களால்  அழைக்கப்பட்டமையும் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றது.

வீராணம் ஏரி
:-
~~~~~~~~~~~~~~
    சோழ மன்னர்கள் காவிரி ஆற்றின் நீர்ப் பெருக்கை வேறு ஆறுகள் மூலமாகத் திருப்பி தம் நாட்டை வெள்ளப் பெருக்கினின்று காக்கவும், பாசன வசதி பெற்று நாட்டை வளப்படுத்தவும் மண்ணி, கொள்ளிடம், கடுவாய், வெண்ணி என்ற ஆறுகளை வெட்டினர் என்பது புலப்படுகின்றது. 
  
    அப்படி பேராறுகளின் கிளைகளாகப் புதிய ஆறுகள் வெட்டுவதற்கு இயலாத நிலையிலுள்ள பெரு நிலப்பரப்புகளில் ஆங்காங்கு ஏரிகள் அமைத்து உழவுத்தொழில் இனிதாய் நடைபெறும் பொருட்டு ஏரிகளை ஏற்படுத்துவது சோழ மன்னர்களது வழக்கம்.

     அதன்படியே கொள்ளிடத்தினின்று வடவாறு அமைத்து அதன் வழியே காவிரி நீரைக் கொணர்ந்து தேக்கிப் பாசன வசதி ஏற்படுத்தும்பொருட்டு தற்சமயம் (முன்னர் தென்ஆர்காடு, தற்சமய கடலூர் மாவட்ட) வீராணம் என்றழைக்கப்படும் வீரநாராயண ஏரியையும், வடஆற்காடு மாவட்டதில் சோழவாரிதி ஏரியையும் முதலாம் பராந்தகன் ஏற்படுத்தினான்.
      முதலாம் பராந்தக சோழனுடைய அரசியல் அதிகாரிகளுல் ஒருவனும் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூருடையானும் ஆகிய அருள் நிதி கலியன் என்பான் மதுரை, ஆனைமலை பக்கதிலுள்ள நரசிங்கமங்கலத்தில் கலியனேரி என்னும் எரியொன்றை அமைத்து அதிலிருந்து நீர்பாய்ந்து நிலங்களில் ஆண்டு முழுதும் நெல் விளையுமாறு செய்தான் என்று அவ்வூரிலுள்ள நரசிங்கப்பெருமாள் கோயிலில் வட்டெழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டால் அறியமுடிகின்றது.

ஏரிவாரியம்:-
~~~~~~~~~~~~
      ஏரிகளை ஆண்டுதோறும் ஆழமாக வெட்டியும் கரைகளை உயரமாகக் கட்டியும் மழைக்காலத்தில் தண்ணீரால் நிரப்பியும் பொதுமக்களுக்கு பயன்படுமாறு செய்து வந்தவர்கள் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உள் கழகத்தினரே ஆவர். அவர்கள் ஏரிவாரிய பெருமக்கள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளனர்.

வரி:-
~~~~~
    இப் பராமரிப்ப்புக்காக பொதுமக்களால் பொருளும் நிலங்களும் அளிக்கப்பட்டு வந்தமையும் அவ்வாறு அளிக்காத ஊர்களில் ஏரியினால் பாசனம் பெறும் நிலங்களை அனுபவிப்போரிடமிருந்து நிலங்களின் அளவுக்கு ஏற்றவாறு வரி வாங்கப்பட்டதையும் அறியமுடிகின்றது.

நாணயம்:-
~~~~~~~~~~    
    முதலாம் பராந்தக சோழன் காலத்தில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. கழஞ்சு, புதிய அக்கம் என்ற நாணயங்கள் குறித்து திருவற்றியூர் மற்றும் ஆனைமலைக் கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.
     இரண்டு குன்றிமணி கொண்டது ஒரு மாஞ்சாடியாகும், இருபது மாஞ்சாடிகள் கொண்டது ஒரு கழஞ்சு என வழங்கி வரப்பட்டுள்ளது.

      பராந்தக சோழனின் 46ஆம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டுக்கள் சோழநாட்டில் கண்டியூர், திருச்சோற்றுத்துறை ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. அவ்வாண்டிற்கு பிறகு இவனது கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. ஆகவே முதலாம் பராந்தகன், எஞ்சியிருந்த சோழ இராச்சியத்தை சில ஆண்டுகள் ஆண்டபின் கி.பி 953ல் இறந்திருக்கவேண்டும் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

  (ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)

3 comments:

  1. தேவைதான் அறிவியலின் தாய் என்பார்கள். அது இங்கும் பொருந்துகிறது.அரசன் கீழ்மட்டத்தில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்விலும் தான் தலையிடுவதன்மூலம் ஏற்படும் வேலைப்பழுவைக்குறைக்கவும் கீழ்மட்டத்து மக்களின் பொறுப்புகளை அவர்களுக்கு உணர்த்தவும் பழியை அரசன்மேல்போடுவதற்கு முடிவுகட்டவும். அரசனின்மேல் நன்மதிப்பை அதிகரிக்கவும் தேவை இருந்திருக்கிறது. அந்தத் தேவையை உணர்ந்துதான் குடவோலை முறை புகுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல ஆறுகளைக் கிளையாறுகளை வெட்டுவதன்மூலம் மூலம் பிரித்தது என்பதெல்லாம் அக்கால நிலைமைகளில் மாபெரும் தொழில் நுட்பம் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அறிவை எல்லாம் பார்க்கும்போது இன்றைய அறிவு மேம்பட்டதாகத் தெரியவில்லையே!....

    ReplyDelete
  2. மீண்டும் தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. @சுபாஷ்
    ..கருத்துக்கு மிக்க நன்றி! ஆம்..மேம்படவேண்டும் என்ற எண்ணம் வந்ததாய்க் கூட தெரியவில்லை!!

    @திருமதி. வேதா.இலங்காதிலகம்
    ..தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete