Saturday 10 May 2014

சோழ மன்னர்கள் Later Chola Kings XXIII விக்ரம சோழன் (முதலாம் பகுதி) Vikrama Chozhan (Part-I)






              





                                                                                                ( சோழ மன்னர்கள் -42.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி!

விக்ரம சோழன். (கி.பி.1118- 1135)
~~~~~~~ **** ~~~~~~~

(
முதலாம் பகுதி)
                                                                                

பிறந்த நாள்
~~~~~~~~~~~~~~


    தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ள சிவன்கூடல் என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில், அவ்வூரில் உள்ள கோயிலில் இம்மன்னன் பிறந்த ஆனித் திங்கள் உத்திரட்டாதி நாள் முதல் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்குக் கி.பி.1128ல் நிலம் அளிக்கபெற்ற செய்தி காணப்படுவதாலும், இம்மன்னனது ஆட்சிக்காலத்தில் தில்லை  மாநகரில் ஆண்டுதோறும் ஆனித் திங்கள் உத்திரட்டாதி நாளில் பெருவிழா நடைபெற்றதென்று இவனது மெய்கீர்த்தி உணர்த்துவதாலும் இம்மன்னன் ஆனித் திங்கள் உத்திரட்டாதி நந்நாளில் பிறந்தவன் என்பதை அறியலாம்.



வேங்கிநாட்டுப் பிரதிநிதி


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    முதலாம் குலோத்துங்கச் சோழனின் நான்காம் புதல்வனான விக்ரம சோழன் தனது இளமைப் பருவத்திலேயே தந்தை குலோத்துங்கச் சோழனால் வேங்கி நாட்டிற்கான சோழப் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டு ஆட்சி புரிந்துவந்தவனாவான்.


இளவரசுப் பட்டம்


~~~~~~~~~~~~~~~~~~


    கி.பி.1118ல் சோழ சாம்ராச்சியத்தின் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன். கி.பி. 1120ல் இவனது தந்தை    முதலாம் குலோத்துங்கச் சோழன் இறந்தவுடன் சோழநாட்டின் முடி சூடி அதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டனன்.


சோழநாட்டு அரியணை


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    சோழச் சக்ரவர்த்தியின் நான்காம் புதல்வனாயிருந்த போதும் இவன் அரியணை ஏறியதற்குக் காரணம் இவனது தமையன்களாகிய இராசராச சோழகங்கன், இராசராச மும்முடிச் சோழன் மற்றும் வீர சோழன் ஆகியோரர் முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்காலத்திலேயே இறந்துபோனதே ஆகும்.


பரகேசரி


~~~~~~~~~


          பிற்காலச் சோழமன்னர்கள் ஒருவர் பின்னொருவராய் மாறி மாறிப் புனைந்துகொண்ட இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டங்களுள் இம்மன்னன் பரகேசரி எனும் பட்டம் பூண்டு ஆட்சி செய்தான் என்பதை கல்வெட்டுக்கள் மூலம் அரியலாம்.


 


மெய்கீர்த்திகள்


~~~~~~~~~~~~~~~~


   

    கல்வெட்டுக்களில் விக்ரம சோழனுக்குறிய மெய்கீர்த்திகள் இரண்டு காணப்படுகின்றன. அவை முறையே, ‘‘ பூமாலை மிடைத்து பொன்மாலை திகழ்’’ எனத் தொடங்கும் ஒன்றும், ‘‘  பூமாதுப் புணர புவி மாது வளர ’’ எனத் தொடங்கும் மற்றொன்றும் ஆகும்.


  இம் மெய்கீர்த்திகள் இரண்டும் விக்ரம சோழனது ஆட்சிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு தொடங்கி அவனது ஆட்சிக்காலம் முழுமைக்குமாக காணப்படுகின்றன.


மேளைச் சாளுக்கியரிடமிருந்து வேங்கி நாட்டை மீட்டது


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    வேங்கி நாட்டில் இருந்த விக்ரம சோழன் கி.பி.1118ல் அங்கிருந்து புறப்பட்டு சோழநாடு திரும்பி ‘இளவரசு’ பட்டம் ஏற்றவுடன் வேங்கிநாடு குலோத்துங்கச் சோழனால் வெலநாண்டின் முதலாம் கொங்கனின் மகன் சோடன் என்பவனுக்கு அளிக்கப்பட்டது.


     இதனையறிந்த மேளைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன் வெலநாண்டு சோடனை வென்று வேங்கி நாட்டினை தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்தான்.


     கி.பி.1126 ல் ஆறாம் விக்கிரமாதித்தன் இறந்தபின் விக்ரம சோழனது முயற்சியால் மீண்டும் வேங்கி நாடு சோழப்பேரரசோடு இணைக்கப்பட்டதை அறிய முடிகிறது.

No comments:

Post a Comment