Sunday 9 December 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-XII, Rajadhiraja Chozhan I

                                     (சோழ மன்னர்கள் -28,29.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்,பேசுகின்றோம்,நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் வகையில் இம்முயற்சி! 
முதலாம் இராசாதிராச சோழன் கி.பி.1018-1054.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
( முதலாம் பகுதி )

பிறப்பு
~~~~~~~
      இம்மன்னன் முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகனாவான். இவன் பூரநாளில் பிறந்தான் என்று திருவடைந்தை கோயிலில் காணப்படும் கல்வெட்டு கூறும்.
    
‘இளவரசு’ பட்டம்
~~~~~~~~~~~~~~~~~~
      இராசாதிராசன் பிறவியிலே பெருவீரமுடையவனாய் விளங்கியதால், இவனது தந்தை முதலாம் இராசேந்திர சோழன் கி.பி.1018ல் இவனுக்கு இளவரசு பட்டம் கட்டி அரசியலில் ஈடுபடச்செய்தான். இவன், தனது தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே, ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் இளவரசனாயிருந்து அரசியலில் சிறப்பாகப் பயிற்சி பெற்றவன் ஆவான்.

      இவன் இளவரசனாயிருந்த காலத்தே பாண்டியர், சேரர், சிங்களர், மேலைச் சாளுக்கியர் என்போரோடு பெரும் போர் புரிந்து வெற்றிமாலை சூடிப் பெரும்புகழ் பெற்றவன் ஆவான்.

சோழச் சக்கரவர்த்தி ‘இராசகேசரி’
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     முதலாம் இராசாதிராச சோழன், தனது தந்தை முதலாம் இராசேந்திர சோழன் இறந்தபின், கி.பி.1044ல் முறைப்படி சோழ நாட்டிற்குச் சக்கரவர்த்தியாய் முடிசூட்டிக்கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினான்.

     இவனுடைய தந்தை ‘பரகேசரி’ என்று பட்டம் சூட்டிக்கொண்டு ஆட்சி செய்தமையால், இம்மன்னன், தம் முன்னோரின் வழக்கப்படி ‘இராசகேசரி’ என்று பட்டம் சூட்டிக்கொண்டு ஆட்சி செய்தனன்.

  ஈழப்போர்
  ~~~~~~~~~~~
      கி.பி. பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகளில் பாண்டியரும், சேரரும், சிங்கள அரசர்களும் தமக்குள் மணவினையால் தொடர்புடையவராய், நெருங்கிய உறவினராகித் தமக்குப் பொது எதிரியாய் விளங்கிய சோழரை வென்று தத்தம் நாட்டைக் கைப்பற்றி ஆட்சிபுரிய முயன்று வந்தனர்.

    சோழரிடம் தோல்வியுற்ற, தம் நாட்டை இழந்த, சிங்களமன்னர் அந்நாட்டின் தென்கீழ்ப்பகுதியாய் அமைந்த, சிறிய பகுதியான ரோகணத்தில் இருந்துகொண்டு தம் நாட்டை மீட்கத் தக்க தருணம் பார்த்திருப்பர் என்பதும் அவ்வாறு சோழருடன் நடத்திய போரில் சிலர் உயிர் துறக்க நேர்ந்தது என்பதையும் அறியமுடிகின்றது.
   
    அவ்வாறே, முதலாம் இராசாதிராச சோழனிடம் தோல்வியுற்ற விக்ரமபாண்டியன் என்ற பாண்டியன் சிங்கள நாட்டினை அடைந்து தன் தாய்ப்பாட்டனுக்குரிய ரோகணத்தை ஆட்சி செய்தபோது, கி.பி. 1046ல் ஈழநாட்டிலும் இராசாதிராசனால் தோற்கடிக்கப்பட்டு மணிமகுடம் முதலானவற்றை இழந்தனன்.

     பின்னர் கி.பி.1047ல் அயோத்திமன்னன் ஜகதீபாலன் என்பவன், விக்ரமபாண்டியனைப் போரில் கொன்று ரோகணத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தான் என்றும் அவனையும் சோழர்படை போரில் வென்று கொன்றது என மகாவம்சம் கூறுகின்றது.

     ஆனால், முதலாம் இராசாதிராச சோழனின் கல்வெட்டுக்கள் ஜகதீபாலன் வரலாறு பற்றி ஏதும் கூறவில்லை. மாறாக, மற்றொரு வரலாறு சொல்லப்படுகிறது. அது, கன்னியாகுப்ஜத்தையாண்ட வீரசலாமேகன் என்பவன் தன் நாட்டைவிட்டு ஈழம்புகுந்து அதனை ஆளுங்காலத்தில்,   முதலாம் இராசாதிராச சோழனிடம் தோல்வியுற்று புறங்காட்டியோடினான் என்று கூறுகின்றது.  பகைஞராகிய சோழரால் அவனது குடும்பத்தார் அவமானப்படுத்தப்படவே மீண்டும் போர்பரிந்து உயிர்துறந்தனன் என்று இராசாதிராசனின் மெய்கீர்த்தி கூறுகின்றது.

     முதலாம் இராசாதிராசனால் சீவல்லபன் மதனராசன் என்ற சிங்கள மன்னன் கி.பி.1046ல் தோற்கடிக்கப்பட்டான் என்ற செய்தியையும் அவன் காலத்திய கல்வெட்டால் அறியமுடிகின்றது என்று வரலாற்றாசிரியர் கூறுவர்.

 மேலைச்சாளுக்கியப் போர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      மேலைச்சாளுக்கியரை முற்றிலும் வென்று அவர்களைத் தமக்குக் கீழ்ப்படிந்த குறுநில மன்னராய் ஆக்கவேண்டும் என்பது சோழ மன்னர்களின் கருத்தாகும். அதன்பொருட்டு மேலைச்சாளுக்கியருடைய குந்தள நாட்டின் மீது அடிக்கடி படையெடுத்துச்சென்று போர் புரிந்து நாடு, நகரங்களை அழித்துவருவாராயினர்.

      அவ்வாறு முதலாம் இராசாதிராசனால் நிகழ்த்தப்பட்ட போரில் சாளுக்கியர் புறங்காட்டியோடிவிட்டனர். கம்பிலி நகரத்திலிருந்த சாளுக்கியரது மாளிகை தகர்த்தெறியப்பட்டு அங்கு இராசாதிராசனின் வெற்றித்தூண் நிறுவப்பட்டது. இவ்வேந்தன் புரிந்த அப்போர் கலிங்கத்துப்பரணியில் ’ கம்பிலி சயத்தம்பம் நட்டதும் ’ என்று புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.
 
( இறுதிப் பகுதி )

    இப்போரானது முதலாம் இராசாதிராச சோழனால் மேலைச்சாளுக்கியம் மீது நிகழ்த்தப்பட்ட இரண்டாவது போர் என அறியப்படுகின்றது.

  முதலாம் இராசாதிராசனது ஆட்சியின் முப்பதாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில் மேலைச்சாளுக்கியருடன் அவன் நிகழ்த்திய மூன்றாம் போர் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. ஆகவே அப்போரானது கி.பி.1048 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியிருத்தல் வேண்டும்.

     முதலாம் இராசாதிராச சோழன் தனது எதிரிகளிடம் போரில் காட்டிய கடுமையும், பிடிபட்டோருக்கு அவனளித்த தண்டனைகள் குறித்தும் அவனது கல்வெட்டுக்களும், மெய்கீர்த்தியும் கூறுகின்றன.
       இம்மன்னன் மேலைச்சாளுக்கியம் மீது நிகழ்த்திய மூன்றாம் போர் குறித்துக்கூறும் கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வைச் சொல்வதால் அப்போரானது சில ஆண்டுகளாகத் தொடர்ந்து மிகக் கடுமையாக நடைபெற்றிருத்தல் வேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறகின்றனர்.
       குந்தள இராச்சியம் மீது அவ்வாண்டில் படையெடுத்துச்சென்ற
இராசாதிராச சோழன் கிருஷ்ணையாற்றங்கரையோரத்திலுள்ள பூண்டூரில் மேலைச்சாளுக்கியருடன்  பெரும்போர் புரிந்து தெலுங்க விச்சையன், அதிராசன், அக்கப்பையன், கொண்டையராயன், முஞ்சன், தண்டநாயகன் தனஞ்செயன், வீரமாணிக்கன் என்னும் சாளுக்கியத் தலைவர்களை வென்று மேலைச்சாளுக்கிய நகரை எரியூட்டி, அந்நகரில் வேங்கை வடிவம் பொறிக்கப்பட்ட வெற்றித்தூண் ஒன்றையும் நாட்டினான்.
          பிறகு தனது பட்டத்து யானையை மேலைச்சாளுக்கியரின், கடல் போன்ற சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமகேசி எனும் மூன்று துறைகளிலும் நீராட்டி சாளுக்கியரின் வராக முத்திரை பொறிக்கப்பட்ட வராகக் குன்றில் தன்னுடைய புலி முத்திரையைப் பொறிக்கச் செய்து வெற்றித்தூணையும் நிறுவினான். அந்நாட்களில் சோழர் படையின் பாசறையில் அவர்களின் நிலையை அறிய சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் அனுப்பிய ஒற்றர் சிலர் சோழ வீரர்களிடம் அகப்பட்டுக்கொண்டனர். இராசாதிராச சோழன் அவர்களைக் கொல்லாமல் அவர்களின் மார்பில் ஆகவமல்லன் எவ்வாறு புறங்காட்டி ஓடினான் என்பதை தெளிவாக எழுதிவித்து, பிறகு அவர்களைத் துரத்திவிடும்படி செய்தான்.
         அந்த அவமானத்தை தாங்காத ஆகவமல்லன் பெரும் படையுடன் வந்து இராசாதிராச சோழனோடு மீண்டும் போர்புரியத் தொடங்கினான். அப்போரில் இராசாதிராசன் பெருவெற்றி எய்தினான். இவ்வெற்றியெய்திய பின்னர் சாளுக்கியரது தலைநகராகிய கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த அரண்மனையையும் இடித்து, தன் வெற்றிக்கு அடையாளமாக அந்நகரிலேயே வீராபிடேகம் செய்து கொண்டு ‘விசயராசேந்திரன்’ எனும் பட்டப்பெயரையும் புனைந்துகொண்டான்.
        முதலாம் இராசாதிராச சோழன் குந்தள நாட்டின் மீது மூன்று முறை படையெடுத்துச்சென்று நிகழ்த்திய வீரச்செயல்கள் ‘கலிங்கத்துப்பரணி’யில் சயங்கொண்டனாராலும், ‘விக்கிரமசோழன் உலா’வில் ஒட்டக்கூத்தரராலும் பாடப்பட்டுள்ளன.
       கி.பி. 1054-ஆம் ஆண்டில் இராசாதிராச சோழன் தன் தம்பி இரண்டாம் இராசேந்திரனோடு மீண்டும் மேலைச்சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். கிருஷ்ணையாற்றங்கரையிலுள்ள கொப்பத்தில் இரு படைகளும் கடும் போர் புரிந்தன. சாளுக்கியர் தரப்பில் ஆகவமல்லனும், சோழர் தரப்பில் இராசாதிராச சோழனும் தலைமையேற்றுப் போர் புரிந்தனர்.
      போர் எவ்வாறு முடியுமோ என்னுமளவில் கடுமையாய் நடைபெற, முதலாம் இராசாதிராச சோழனின்  தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரன் போர்க்களத்திற்கு வராமல் பெரும்படையுடன் ஆயத்தநிலையில் தங்கியிருந்தனன்.
       சாளுக்கியப் படைகள் ஓர் முகமாய்த் திரண்டு இராசாதிராச சோழனின் பட்டத்து யானையினைத் தாக்கின. அதனால், அவ்யானை இறக்கவே, அதன்மீதிருந்த இராசாதிராச சோழனும் பகைவர் அம்பிற்கு இலக்காகி வீரமரணமடைந்தான்.
       ஆயத்தநிலையில் இருந்த இரண்டாம் இராசேந்திரன் தன் பட்டத்து யானைமீதேறி போர்க்களஞ்சென்று போரிட்டு மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனைத் தோற்றோடச்செய்தான்.
        இளவரசனாகப் பட்டம் சூட்டப் பெற்ற நாளிலிருந்து உயிர் துறக்கும் வரையில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் போர்க்களத்தில் கழித்த, தனது தந்தை முதலாம் இராசேந்திரன் அடைந்த பெரு வெற்றிகளுக்குக் காரணமாயிருந்த, முதலாம் இராசாதிராசனது வாழ்க்கை வீரம் நிரம்பிய வாழ்க்கை எனலாம்.
        வீராபிடேகமாகிய ‘அசுவமேதயாகம்’ செய்த சோழமன்னன் எனும் பெயரும் இவனையே சாறும்.

பட்டப் பெயர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~
        முதலாம் இராசாதிராச சோழனுக்கு ‘விசயராசேந்திரன்’, ‘சயங்கொண்டசோழன்’, ‘ஆகவமல்ல குலாந்தகன்’, ‘கல்யாணபுரம்கொண்ட சோழன்’, வீரராசேந்திரவர்மன் எனும் பட்டப் பெயர்கள் வழங்கப்பெற்றுவந்தன.

மனைவிகள்
~~~~~~~~~~~~~
           இம்மன்னனின் பட்டத்துதரசி ‘திரைலோக்கியமுடையாள்’ ஆவாள். ‘உலகுடைய பிராட்டி’  என்னும் ஒரு மனைவி இம்மன்னனுக்கு இருந்தனள் என்று கன்னியாகுமரி கல்வெட்டொன்றினால் அறியப்படுகிறது.
                       
ஆட்சிப்பொறுப்பு.
~~~~~~~~~~~~~~~~~
    கங்கைகொண்ட சோழபுரத்தைத் தனது தலைநகராய்க் கொண்டு ஆட்சிபுரிந்துவந்த இம்மன்னன் போர்க்களம் செல்லும் காலத்தில் சோழநாட்டில் அமைதியான ஆட்சி நிலவ அரசாங்க அலவல்களில் கவனம் செலுத்தி ஆட்சியை நடத்திவந்தது இவனது தம்பிகளும் அரசியல் அதிகாரிகளுமாவர்.

2 comments:

  1. போற்றிபாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷ பெட்டகம்

    ReplyDelete
  2. மிக்க நன்றி தமிழ்.

    ReplyDelete