Monday 7 January 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XIV, Virarajendra Chozhan (part -1).



                                         (சோழ மன்னர்கள் -32.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
 வீரராசேந்திர சோழன் கி.பி.1063-1070.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     இம்மன்னன் ‘கங்கை கொண்ட சோழன்’ என்று அழைக்கப்படும் முதலாம் இராசேந்திர சோழனின் புதல்வர்கள் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன்,  சுந்தர சோழபாண்டியன்  என்றழைக்கப்பட்ட இராசமகேந்திரன் மற்றும் வீரராசேந்திரன் என்போருள் கடைசீப் புதல்வன் ஆவான் .

     சோழ இராச்சியத்தை இராசாதிராச சோழனுக்குப் பின்னர் அவனின் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரன் ஆட்சி செய்தான்.

      இரண்டாம்
இராசேந்திர சோழனின்  காலத்திலேயேஇளவரசு பட்டம் சூட்டப்பெற்ற, அவனது தம்பி இராசமகேந்திரன்  மாண்டதால், வீரராசேந்திரன் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றான். இவனது ஆட்சிக்காலத்தின் நான்காம் மற்றும் ஏழாம் ஆண்டுகளின் கல்வெட்டுக்களால் இவனுக்குக் கி.பி.1062ம் ஆண்டில் இளவரசுப் பட்டம் சூட்டப்பெற்றிருக்க வேண்டும் என்பதை ஆறியமுடிகின்றது.

ஆவணி ஆயில்யம்
~~~~~~~~~~~~~~~~~~

       
"
ஸ்ரீவீர ராஜேந்திர தேவர் ஆட்டைத் திருநாள் ஆவணித் திங்கள் திருவாயிலியத்தில்என்று திருமுக்கூடலில் காணப்படும் கல்வெட்டுச் சொற்றொடராலும், தற்சமயம் நாகை  மாவட்டத்தில் உள்ள ஊரான , திருவெண்காட்டில், திங்கள் தோறும் ஆயிலிய நாளில் திருமஞ்சனமாடித் திருவிழா நடத்த இவனது ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் நிவந்தம் விடப்பட்டிருப்பதாலும், இவனது அதிகாரிகளுள் ஒருவனால் திருவற்றியூர்க் கோவிலில்  ஆயிலிய நாளில் சிறப்புவிழா நடத்த ஏற்பாடு செய்திருப்பதாலும் இம்மன்னன ஆவணி மாதத்தில் ஆயில்ய நாளில் பிறந்தான் என்பது தெரியவருகின்றது.

இராசகேசரி
~~~~~~~~~~~~

     
சோழ
இராச்சியத்தை இவனுக்கு முன் ஆண்ட இவனது தமையன் இரண்டாம் இராசேந்திரன் பரகேசரி எனும் பட்டம் கொண்டு ஆண்டதால்
சோழர் குல வழக்கப்படி இவன் தனக்கு இராசகேசரி எனும் பட்டம் சூட்டிக்
கொண்டு ஆண்டான்

மெய்கீர்த்தி
~~~~~~~~~~

 
இம்மன்னனது கல்வெட்டுக்களில் இவனுக்குரியதாய் காணப்படும் மெய்கீர்திகளில் ஒன்றில் காணப்படுவதிலிருந்து இவனது சகோதரர்களைப் போன்றே பேராற்றலுடைய பெருவீரனாக வாழ்ந்தான் என்பதும் இவனது ஆட்சிக்காலம் முழுதும் போரிலேயே கழிந்தது என்பதும் தெரிகின்றது.

குந்தளரோடான  ஐந்து போர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

          
"
ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்டுஎன்று காணப்படும் இவனது கல்வெட்டுத் தொடரிலிருந்து இம்மன்னன் தனது ஆட்சிக்காலத்தில் மேலைச்சாளுக்கிய ஆகவமல்லனோடு ஐந்துமுறை போர்புரிந்து வென்றிருத்தலை அறியமுடிகின்றது.
   
     அவற்றில் முதலாவது போரானதுவீரராசேந்திர சோழன் தனது முடிசூட்டு விழாவின்பொருட்டு தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்ததைப் பயன்படுத்திக் குந்தள வேந்தன்   ஆகவமல்லனின் புதல்வன் விக்கிரமாதித்தன் என்பவன் சோழ இராச்சியத்தின் வடபகுதியில் இருந்த கங்கபாடி நாட்டினைக் கைப்பற்ற முயல்வதையறிந்த  வீரராசேந்திர சோழன் பெரும் படையுடன் சென்று விக்கிரமாதித்தனை வென்று துங்கபத்திரை ஆற்றிற்கப்பால் ஒடிவிடச் செய்ததாகும்.

மேலை
- கீழைச் சாளுக்கியரிடையேயான போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

         
வேங்கி நாட்டினை ஆண்டுவந்த கீழைச் சாளுக்கிய மன்னர் குலமானது முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்தே சோழர்  குலத்தோடு நெருங்கிய உறவோடும் பற்றோடும் இருந்துவந்தனர். அக்காரணத்தால் சோழ இராச்சியத்தின் அவ்வடவெல்லையில் அமைதி நிலவியது. இதனை என்றும் நிலை நிறுத்திக்கொள்வதில் சோழமன்னர் முயன்று அதில் முழுதும் வெற்றியடைதிருந்தனர் என்றே சொல்லலாம்.

           
இங்ஙனம் கீழைச் சாளுக்கியர் தம் பகைவராகிய சோழரோடு நெருங்கிய உறவில் இருப்பதை  விரும்பாத மேலைச்சாளுக்கியர்   வேங்கி நாட்டினரை தம்மோடு இணைத்துக்கொள்வதில் பெரும் அக்கறைகாட் டினர். அம்முயற்சியில் வெற்றியடையாத அவர்கள் தக்க தருணம் பார்த்து காத்திருந்தவேளையில், கங்கைகொண்ட சோழனின் மருமகனும், கீழைச் சாளுக்கிய மன்னனுமான  இராசராச மகேந்திரன் வேங்கியில் இறந்தவுடன் கீழைச் சாளுக்கிய நாட்டினை தன் நாட்டோடு இணைக்க அதுவே தக்க தருணம் என்ற எண்ணத்தில் ஆகவமல்லன் பெரும் படையொன்றை அனுப்பினான்.

        இதனை அறிந்த வீரராசேந்திரன், சோழரின் நெருங்கிய உறவாகிய வேங்கியைக் காக்க பெரும் படையோடு சென்று, ஆகவமல்லனின் படையோடு போரிட்டு, அவனது படைத்தலைவனைக் கொன்று மேலைச்சாளுக்கியர்
   கீழைச் சாளுக்கிய நாட்டினைக் கைப்பற்றும் முயற்சியை முறியடித்தான். இப்போர் வீரராசேந்திரன் மேலைச்சாளுக்கியரோடு நடத்திய இரண்டாம் போராகும்.
(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)



No comments:

Post a Comment