Monday 25 March 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XIX, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-4) Kulothunga Chozhan I (part-4).



                                            (சோழ மன்னர்கள் -38.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  ( நான்காம் பகுதி)
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற, இம்
முதலாம் குலோத்துங்க சோழன். }

       விக்ரமாதித்தனோ தனது தம்பி சயசிங்கனை தனது பக்கம் இருக்கும்படி செய்துகொண்டு சோழ இராச்சியத்துடன் போர்புரியப் புறப்பட்டான்.

      சோழ சாம்ராச்சியத்தின் வடக்கு எல்லையான மைசூர் பகுதியில் இருதரப்பினருக்கும் கடும் போர் நடந்தது. போரில் சோமேஸ்வரன் தோற்கடிக்கப்பட்டு விக்ரமாதித்தனால் சிறைபிடிக்கப்பட்டுத் தன்னிடம் இருந்த குந்தளப்பகுதியையும் இழந்தான்.

      எனினும், இருதரப்பினருக்கும் தொடர்ந்து போர் நடந்துவர, கோலாரில் உள்ள நங்கிலி என்னும் இடத்தில் நடைபெற்றப் போரில் குலோத்துங்க சோழன் வெற்றி பெற்று விக்ரமாதித்தனைத் துங்கபத்ரை ஆற்றின் கரைவரையில் துரத்தினன். இறுதியில் துங்கபத்ரை ஆற்றின் கரையோரம் நடைபெற்ற போரிலும் வெற்றி வாகைசூடி விக்ரமாதித்தனையும் அவனது தம்பி சயசிங்கனையும் தோற்கடித்து குந்தள நாட்டின் ஒருபகுதியினைச் சோழ இராச்சியத்துடன் இணைத்த புகழுடன் தலைநகர் திரும்பினான் குலோத்துங்க சோழன்.
      
        குலோத்துங்க சோழன் ஆட்சியின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில் அவன் விக்ரமாதித்தனையும் சயசிங்கனையும் வென்ற செய்திகள் குறிக்கப்பெற்றுள்ளமையால்  அப்போர் கி.பி.1076 ல் நடைபெற்றிருத்தல் வேண்டும் .

பாண்டியருடனான போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    மேலைச்சாளுக்கியரோடு நடத்திய வடதிசைப் போருக்குப் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் நடத்திய போர் பாண்டியருடனான போராகும்.

    பாண்டி நாட்டை ஆண்டுவந்த  பாண்டி மன்னர்கள் தமது நிலையில் தாழ்ந்திருந்த காரணத்தால், முதலாம் பராந்தக சோழன்  மற்றும்  முதலாம் இராசராச சோழன் ஆகியோரது காலங்களில் சோழச் சக்கரவர்த்திக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர்களாய் வாழ்ந்து வந்தனர்.

     ஆயினும், தாங்கள் சிறிது படை வலிமை பெற்றபோதெல்லாம் தாம் சுயேட்சையான முடிமன்னர்களாக விளங்கவேண்டும் என்ற கருத்தில் சோழரோடு முரண்படத்தொடங்கினர்.

     இக்காரணத்தாலேயே சோழ சாம்ராச்சியத்தை ஆண்டுவந்த  சோழ மன்னர்கள் அவ்வப்போது தம் சாம்ராச்சியத்திற்குட்பட்ட பாண்டி நாட்டுப்பகுதிக்குப் படைகளை அனுப்பி பாண்டியரது முயற்சியை முறியடித்து வந்தனர்.

     இதுபோன்று அவ்வப்போது நடைபெறுவதால் ஏற்படக்கூடிய இன்னல்களைத் தவிர்க்கும் எண்ணத்துடனேயே முதலாம் இராசேந்திர சோழன், தன்னால் போரில் வென்றடக்கப்பட்ட பாண்டி நாட்டுப்பகுதியில் மீண்டும் கலவரங்கள் எழாதவண்ணம், தனது புதல்வருள் ஒருவனுக்கு  ‘சோழபாண்டியன்’ என்ற பட்டம் கட்டி சோழ இராச்சியத்திற்குட்பட்ட பாண்டி நாட்டை தனது பிரதிநிதியாக இருந்து ஆளும்படியாகச் செய்தனன்.

     அவ்வாறே, முதலாம் இராசேந்திர சோழனின் இரு புதல்வர்களும் அவனது பேரன்களும் பாண்டி நாட்டுப்பகுதியை ஆண்டுவந்தனர்.

     எனினும், கி.பி.1070ல் அதிராசேந்திர சோழனின் மறைவிற்குப் பின்னர் அம்மன்னனுக்குப் புதல்வர் இல்லாத காரணம்தொட்டு சிலகாலம் சோழஇராச்சியத்தில்  நிலவிய குழப்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பாண்டி மன்னர்குலத்தோன்றலான ஐவர் பாண்டி நாட்டுப்பகுதியினைத் தமக்குள் ஐந்து பகுதிகளாய் பிரித்துக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினர். அவ்வாறான அவர்களது ஆட்சி ஏறத்தாழ ஐந்தாண்டுகள் நடைபெற்றிருக்க வேண்டும்.

     முதலாம் குலோத்துங்க சோழன், மேலைச்சாளுக்கிய போருக்குப்
பின்னர் ஐந்தாண்டுகாலம் தனது படையினைத்திரட்டி கி.பி.1081ல் பாண்டி நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

       முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி

          “ வடகடல் தென்கடல் படர்வது போலத்
            தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்
            ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
            வெரிநளித் தோடி அரணெணப் புக்க
            காடறத் துடைத்து நாடடிப்படுத்து…”

என்று கூறுவதிலிருந்தும், கலிங்கத்துப்பரணியிலிருந்தும் அவன் கடல்போன்று தோற்றமளித்த பெரும்படையோடு சென்று பாண்டியர் ஐவரையும் தோற்றோடச்செய்து பாண்டி நாட்டைக் கைப்பற்றினான் என்பதை அறியமுடிகின்றது.

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
 
[ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]


No comments:

Post a Comment