Sunday 7 April 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XX, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-5) Kulothunga Chozhan I (part-5).


                                 (சோழ மன்னர்கள் -39.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  (ஐந்தாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

     முதலாம் குலோத்துங்க சோழன் பாண்டியர் ஐவரையும் வென்றபோதும் தனது முன்னோரைப்போன்று போரில் வென்ற பகுதிகளைச் சோழப் பிரதிநிதி மூலம் ஆட்சிபுரியாமல் அவற்றை அவ்வேந்தர்களிடமே அளித்து தனக்குத் திறை செலுத்தும் மன்னராக்கினான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

சேரருடன் போர்
~~~~~~~~~~~~~~~~~

      பாண்டியர்களைப் போலவே, அதிராசேந்திர சோழனின் இறப்பிற்குப் பின்னர் அரசனின்றி சோழ இராச்சியத்தில் நிலவிய குழப்ப நிலையைப் பயன்படுத்தி, சேரர்களும் தம் நாட்டுப்பகுதியினைத் தாமே ஆட்சி புரியத் தொடங்கினர்.

      பாண்டியரை வென்று தனக்குக் கப்பம் செலுத்துமாறு செய்தது போன்றே சேரரையும் வென்று அந்நிலைக்குக் கொண்டுவர முதலாம் குலோத்துங்க சோழன் சேரர் மீது படையெடுத்துச் சென்றான். குலோத்துங்கன் ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டிலேயே இப்படையெடுப்பும் நிகழ்ந்துள்ளது. பாண்டியர் மற்றும் சேரருடனான  குலோத்துங்கனின்  போர் ஓராண்டிலேயே நிகழ்ந்தது என்பது இவனது மெய்கீர்த்தியிலிருந்து புலப்படுகின்றது.

        சேரர் மீது படையெடுத்துச் சென்ற குலோத்துங்க சோழன் திருவனந்தபுரத்திற்குத் தெற்கே உள்ள விழிஞ்சியத்திலும், காந்தளூர்ச் சாலையிலும், குமரிமுனைக்கு வடக்கேயுள்ள கோட்டாறு என்னுமிடத்திலும் போர்புரிந்து பெரு வெற்றியடைந்தான்.

       காந்தளூர்ச் சாலையில் இருந்த சேரரின் கப்பற்படையை அழித்து கோட்டாற்றினை எரியூட்டினான் என்பதை கலிங்கத்துப் பரணியும் விக்ரம சோழனுலாவும் கூறுகின்றன. தோல்வியுற்ற சேரமன்னன், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்திவர ஒப்புக்கொண்டு சோழ இராச்சியத்திற்குட்பட்ட குறுநில மன்னனாய் ஆனான்.

      சோழ இராச்சியத்திற்குட்பட்ட குறுநில மன்னராய் விளங்கும்  சேரரும், பாண்டியரும் மீண்டும் தம் படை வலிமையைப் பெருக்கிக்கொண்டு சோழ இராச்சியத்தோடு முரண்படாதவாறு இருக்கும்படியாக அவர்தம் பகுதியில் தனது சிறந்த தளபதிகளின் கீழ் நிலைப் படைகளை நிறுவினான் குலோத்துங்க சோழன். அவ்வாறு கோட்டாற்றில் அமைக்கப்பட்ட படை ‘கோட்டாற்று நிலைப்படை’ என்னும் பெயரைப் பெற்றது என்பதைhf கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.

கலிங்கப் போர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~

       முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்திகளிலிருந்து அவன் இரு கலிங்கப் போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டான் என்பதை அறியமுடிகின்றது. இரு கலிங்கப் போர்களுள் ஒன்று இம்மன்னனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டிலும் மற்றொன்று இம்மன்னனது ஆட்சியின் நாற்பத்தியிரண்டாம் ஆண்டிலும் நடைபெற்றதாய் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

தென் கலிங்கப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
       முதலாம் குலோத்துங்க சோழனின் முதல் கலிங்கப் போர் கி.பி.1096-ல் நடைபெற்றிருக்க வேண்டும். அம் முதல் கலிங்கப் போர் தென் கலிங்கப் போராகும்.

       தென் கலிங்கம் என்பது கோதாவரி ஆற்றிற்கும் மகேந்திர மலைக்குமிடையே அமைந்திருந்த, வங்காள விரிகுடாக்கடல் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய நாடாகும். அக்காலத்தில் அந்நாடு வேங்கி நாட்டு மன்னருக்குட்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.

     வேங்கி நாட்டினை அக்காலத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் புதல்வனான விக்ரமசோழன் குலோத்துங்கனின் பிரதிநிதியாக இருந்து ஆண்டுவந்தான். இளஞ்ஞனான அவனை வீழ்த்தி தென்கலிங்கத்தைத் தானே ஆளும்பொருட்டு தென்கலிங்கக் குறுநில மன்னன் வீமன் இராச்சியத்தில் குழப்பமும் கலகமும் செய்யலானான். இதனையறிந்த விக்ரமசோழன், சோழ இராச்சியத்திற்குட்பட்ட பாண்டிமன்னன் சடையவர்மன் பராந்தகன் என்பவனையும் உதவியாகக்கொண்டு பெரும்படையோடு சென்று வீமனை வீழ்த்தி வெற்றிவாகை சூடினான் என்பதை விக்ரமசோழனின் மெய்கீர்த்தியிலிருந்து அறியமுடிகின்றது.

      தென் கலிங்க நாடு மீண்டும் சோழரின் ஆட்சிக்குட்பட்டுவிட்டது என்பதை அந்நாட்டிற்குட்பட்ட சிம்மாசலம், திராட்சாராமம் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டுக்களும் உறுதிசெய்கின்றன.

      இப்போர் முதலாம் குலோத்துங்க சோழனின் புதல்வன் விக்ரமசோழனின் தலைமையில் நடைபெற்றிருந்தாலும் அது சோழ சாம்ராச்சியத்தினை ஆண்டுவந்த முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதால் அவ்வெற்றி சோழமன்னன் முதலாம் குலோத்துங்கனின் வெற்றியாகக் கருதப்பட்டது இயல்பேயாகும்.

வடகலிங்கப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
[ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]

No comments:

Post a Comment